'அம்மா'வின் அறிவிப்பால் கரும்பு வியாபாரிகளுக்கு தித்திக்கும் பொங்கல், விவசாயிகளுக்கு கசப்பு பொங்கல்
சென்னை: அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் 2 அடி நீள கரும்பு இலவசமாக அளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததால் விவசாயிகளுக்கு பொங்கல் பண்டிகை கசந்து போயுள்ளது.
பொங்கல் பண்டிகை என்றால் கரும்பு இல்லாமலா? விருதுநகர் மாவட்டம் சிவகாசி, எரிச்சநத்தம் அருகே உள்ள நடையனேரி, செவலூர், முருகனேரி, செங்குளத்தில் பொங்கலையொட்டி 100 ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிருட்டுள்ளனர். தற்போது கரும்பு அறுவடை பணிகள் நடந்து வருகிறது.
ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் வியாபாரிகள் கரும்புகளை பார்வையிட்டு ஏக்கருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வரை விலை பேசுவார்கள். மேலும் விலை பேசி முடித்து முன்பணம் அளித்துவிட்டு செல்வார்கள்.

பணப்புழக்கம்
இந்த ஆண்டு பணப் புழக்கம் குறைவாக இருப்பதால் குறைந்த அளவு வியாபாரிகளே கரும்புகளை பார்வையிட வந்தனர். அவர்களும் ஏக்கருக்கு ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் முதல் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் வரை தான் பேரம் பேசி முன்பணம் அளித்தனர்.

இலவச கரும்பு
ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையைொட்டி 2 அடி நீள கரும்பு இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார்.

அதிகாரிகள்
ஜெயலலிதாவின் அறிவிப்பை அடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் சென்றனர். ஆனால் விவசாயிகள் வியாபாரிகளிடம் முன்பணம் பெற்றதால் கரும்பை அரசு அதிகாரிகளுக்கு விற்க முடியாத நிலையில் உள்ளனர்.

வியாபாரிகள்
விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கரும்பை வாங்கிய வியாபாரிகளோ ஏக்கருக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வரை அரசு அதிகாரிகளுக்கு விற்பனை செய்துள்ளனர்.

கசப்பு பொங்கல்
நாம் பார்த்து பார்த்து வளர்த்த கரும்புகளை நம்மிடம் குறைந்த விலைக்கு வாங்கி இந்த வியாபாரிகள் எளிதில் அதிக லாபம் பார்த்துவிட்டனரே என்று நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்த விவசாயிகள் கவலையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications