அண்ணாமலைக்கு முதுகெலும்பு இருந்தால்.. என் மீது கேஸ் போடட்டும்! சவால் விட்டு கொந்தளித்த டி.ஆர்.பாலு!
சென்னை: அண்ணாமலைக்கு முதுகெலும்பு ஒன்று இருக்குமானால் தன் மீது வழக்குத் தொடரட்டும் என சவால் விட்டு கொந்தளித்துள்ளார் டி.ஆர்.பாலு எம்.பி.
அண்ணாமலைக்கு தாம் அனுப்பிய நோட்டீஸ்க்கு இதுவரை பதில் இல்லை என்றும் நிச்சயம் சிவில் வழக்கு ஒன்றும், கிரிமினல் வழக்கு ஒன்றும் தாம் தொடர்வேன் என உறுதி தெரிவித்துள்ளார் டி.ஆர்.பாலு.

உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் தன்னை தெரியும் என்றும் இப்படிப்பட்ட தன் மீது பத்தாயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக பேசுவதற்கு முன்பு அண்ணாமலை யோசித்திருக்க வேண்டாமா என வினவியுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தில் என்ன சொத்து விவரங்களை காட்டியிருக்கிறேனோ அது மட்டும் தான் தன்னிடம் இருப்பதாகவும் அதைவிட கூடுதலாக ஒரு செண்ட் நிலம் வாங்கியிருந்தால் திமுகவினர் தன்னை தொங்கவிட்டு அடிக்கலாம் என ஆவேசம் காட்டினார்.
அண்ணாமலைக்கு சூடு சொரணை இருக்கிறதா என்றும் மான ரோஷம் இருக்கிறதா என்றும் அடுக்கிக்கொண்டே போன டி.ஆர்.பாலு, தாம் இன்னும் இறங்கி பேசிவிடுவேன் என்றும் நீங்கள் இருப்பதால் அது போல் பேசவிரும்பவில்லை எனவும் கூட்டத்தினரை பார்த்துக் கூறினார்.

முதலமைச்சர் ஸ்டாலினை அசைத்து பார்க்கலாம் என்று பாஜகவும், அதிமுகவும் நினைத்தால் திமுக தொண்டன் பாஜகவையும், அதிமுகவையும் ஓட ஓட விரட்டி அடிப்பான் என டி.ஆர்.பாலு எச்சரித்தார்.
மிரட்டிப் பார்க்கும் வேலையை திமுகவினரிடம் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அதற்கெல்லாம் அஞ்சியவர்கள் தாங்கள் இல்லை எனவும் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நேற்றிரவு கலந்துகொண்டு பேசிய டி.ஆர்.பாலு இதனைக் கூறினார்.












Click it and Unblock the Notifications