சசிகலா எப்படி முதல்வராகலாம்.. டி.ராஜேந்தர் ஆவேசம் !
ஜெயலலிதா அம்மாவுக்குத்தானே ஓட்டுப்போட்டோம், சசிகலா எப்படி முதல்வராகலாம் என்று முகம் சுளிக்கிறது பெரும்பகுதியான மக்கள் மன்றம் என்று டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜனநாயகத்திற்கு விரோதமாக சசிகலா முதல்வராவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று லட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜனநாயகம் இடம் கொடுப்பதால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக கூடி யாரை வேண்டுமானாலும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கலாம், அது தான் அரசியல் சட்டம்.
ஜாதகம் இடம் கொடுத்தால், சாமியறையில் சாம்பிராணி போடும் சாதாரண பெண்மணியை கூட ஆக்கிவிடும் சாம்ராஜ்யம் ஆளும்படி, அது தான் ஜாதக கட்டம். மாண்புமிகு ஆக இருக்கும் சிசகலா அம்மையாருக்கு, அவரது ஜாதகம் தற்போதைக்கு செய்யலாம் சாதகம், இது தமிழ்நாட்டுக்கு சாதகமா? பாதகமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
அ.தி.மு.க பொதுக்குழு, சசிகலா அம்மையாரை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து ஆக்கியது சின்னம்மா.இப்போது அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை முதல்வராக தேர்ந்தெடுத்து ஆக்கியிருக்கிறார்கள் தமிழ் நாட்டுக்கு சி.எம். மா. முதல்வராக மாண்புமிகு ஆவதற்கு சசிகலா அம்மையாரை அழைக்கிறது சட்டமன்றம்.
ஆனால் ஜெ. அம்மாவுக்குத்தானே ஓட்டுப்போட்டோம், இவர் எப்படி முதல்வராகலாம், என்று முகம் சுளிக்கிறது... பெரும்பகுதியான மக்கள் மன்றம். இது தான் நிதா்சனம், என்னப்பிரயோஜனம்;? யார் வேண்டுமானாலும் செய்யலாம் விமா்சனம், ஆனால் ஆண்டவன் நினைத்தால் தான் தமிழ்நாட்டிற்கு விமோச்சனம்.
அம்மா இல்லாத இடத்தில், அம்மாவால் அங்கீகரிக்கப்பட்ட மரியாதைக்குரிய பன்னீர்செல்வம் அவர்களை கூட மக்கள் பன்னீராக நினைக்கிறார்கள், ஆனால் மாண்புமிகு சசிகலாவை, சகித்துக் கொள்ள முடியாமல் ஜனங்கள் மீது சட்டென்று கொட்டப்பட்ட வெந்நீராக நினைக்கிறார்கள். வெந்து போய் கண்ணீர் வடிக்கிறார்கள்.
மக்கள் விரோத போக்கை கண்டித்து சில கட்சியினர் பொங்கி வெடிக்கிறார்கள். ஆனால் மக்கள் நலனுக்கு எதிராக இருப்பவா்கள் தான் தாங்கிகொடி பிடிக்கிறார்கள். கருணாநிதியின் கதை வசனத்தில் வெளியான மனோகரா படத்தில் ராஜ்ஜியத்தை பிடிக்க டி.ஆர்.ராஜகுமாரி பல கட்டத்தில் செய்து கொண்டே இருப்பார்; சூழ்ச்சி, ஆனால் உச்சக்கட்டத்தில் அடைந்து விடுவார் வீழ்ச்சி.
முதல்வராக பதவி ஏற்பதற்கு முன் கேட்கிறோம் பல கேள்வி? முன்னாள் முதல்வர் அம்மாவின் சாவில் மர்மம் இருப்பதாக உங்கள் மீது இருக்கிறது அத்தனை குற்றச்சாட்டு, அத்தனையும் மீறி உங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களுக்கு போடலாம் ஓட்டு.
சில சட்டமன்ற உறுப்பினர்கள் வேண்டுமானால் கொடுக்கலாம் உங்களுக்கு சுவையான சூப்பு, ஆனால் மக்கள் மன்றம் உங்களுக்கு வைத்து விடும் ஆப்பு. இதுதான் எங்கள் கணிப்பு. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
டி.ராஜேந்தர் செய்தியாளர் சந்திப்பு முழு பேச்சு வீடியோ: