ராஜிவ் கொலை- பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் சிபிஐக்கு கோர்ட் நோட்டீஸ்!
சென்னை: ராஜிவ் வழக்கில் விடுபட்டுப் போன விவகாரங்களை விசாரிக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் சென்னை தடா நீதிமன்றம் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை குறித்து விசாரணை நடத்தும் சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) மற்றும் பல்நோக்கு ஒழுங்கு கண்காணிப்பு ஆணையத்தை (எம்.டி.எம்.ஏ)யும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும் பிரதிவாதியாகச் சேர்த்து இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் அண்மையில் தடா நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

சில ஆதாரங்களை மட்டுமே வைத்து..
அந்த மனுவில் பேரறிவாளன், ராஜிவ் கொலை வழக்கில் 18-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டேன். தற்போது தூக்கு தண்டனையை எதிர்கொண்டுள்ளேன். அப்போதிருந்த ஆதாரங்களை மட்டும் வைத்து தடா நீதிமன்றம் எனக்கு தூக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனையை உச்சநீதிமன்றம் 1999-ம் ஆண்டு உறுதி செய்தது.

பல்நோக்கு கண்காணிப்பு விசாரணை என்னாச்சு?
இந்த வழக்கின் எப்.ஐ.ஆர். இன்னும் இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் விசாரணை காலதாமதம் ஆவதால் எனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிலரை

புதைக்கப்பட்ட உண்மைகள்
இந்த வழக்கில் கொண்டு வரவில்லை. பல உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் வெளிச்சத்துக்கு வர வேண்டும். இதையெல்லாம் எஸ்.ஐ.டி. மற்றும் எம்.டி.எம்.ஏ. காட்டவில்லை.

பெயரளவு விசாரணை
ராஜிவ் கொலையின் பின்னணியில் சதித்திட்டத்தில் ஈடுபட்ட சில அரசியல்வாதிகள், அதிகாரிகளின் செயல்பாட்டை கண்டுபிடிப்பதற்காக மேல் விசாரணைக்கு உத்தரவிட இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் மறு விசாரணை வேண்டும் என்பது எனது கோரிக்கை அல்ல.
இந்த விசாரணை அமைப்புகளால் நடத்தப்படும் பெயரளவு விசாரணையால் எனக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே நீதிமன்றத்தின் கண்காணிப்பில் துரிதமான விசாரணை நடத்தப்படுவது அவசியம். முன்பு நடந்த விசாரணையில் விடுபட்டுப்போன பகுதிகளையும் விசாரணையில் சேர்க்க வேண்டும்.

விசாரணை ஆவணங்களை தாக்கல் செய்க
இந்த விசாரணையை முன்பு நடத்தி இருந்தால் எனக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. இந்த வழக்கில் இதுவரை சி.பி.ஐ.யின் இரண்டு விசாரணை அமைப்புகளும் மேற்கொண்டுள்ள விசாரணை ஆவணங்கள், பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

மேல் விசாரணை அவசியம்
ஜெயின் கமிஷன் அறிக்கையில் கூறியுள்ள படி, சதித்திட்டத்தில் ஈடுபட்ட சிலரை கண்டுபிடிப்பதற்கு மேல்விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். வெளிநாட்டினரின் பின்னணியும் இருக்கிறதா என்பதை சரியாக விசாரிக்கவில்லை.

சேஷனின் ஜோசியம்
ராஜிவ் காந்தியின் மரணம் பற்றி ஜோதிடத்தின் மூலமாக ஒரு வாரத்துக்கு முன்பே தெரிந்துகொண்டேன் என்று அப்போதைய இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சேஷன் தமது புத்தகத்தில் கூறியுள்ளார். அப்படி என்றால், ஏன் ராஜிவ் பாதுகாப்பு விஷயத்தில் அவர் கவனம் செலுத்தவில்லை? என்பதையெல்லாம் விசாரிக்கவில்லை.

புலிகளுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு
மேலும் ராஜிவ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளுடன் தமிழக அரசியல்வாதிகள் பலருக்கும் தொடர்பும் இருந்தது.

தாணுவுக்கு இடம்கொடுத்த காங். பிரமுகர்
அதேபோல் மனித வெடிகுண்டாக வந்த தாணுவுக்கு அடைக்கலம் கொடுத்த காங்கிரஸ் கட்சி பெண் பிரமுகர் பற்றியும் விசாரணை நடத்தப்படவில்லை.
எனவே இந்த விஷயத்தில் மேல் விசாரணை தேவை. இதுவரை இரண்டு விசாரணை முகமைகளும் நடத்திய விசாரணையின் ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இன்று விசாரணை
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி தண்டபாணி முன்பு இன்று வந்தது. அப்போது பேரறிவாளனின் மனு மீது பதில் அளிக்கக் கோரி சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications