செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதையில்.. தாம்பரம் டூ கொல்லத்திற்கு சிறப்பு ரயில்!
சென்னை தாம்பரத்தில் இருந்து கொல்லத்திற்கு செங்கோட்டை - புனலூர் அகலரயில் பாதை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
சென்னை : செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதைப் பணிகள் முடிவடைந்த நிலையில், சென்னை தாம்பரத்தில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக கேரள மாநிலத்திற்கு பல்வேறு ரயில்கள் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் 2010ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதைகளை பிராட் கேஜ் பாதையாக மாற்ற முடிவெடுத்து 350 கோடி ரூபாய் திட்டத்தில் பணிகள் நடந்து வந்தது.
கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்த செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதைப் பணிகள் சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. இந்நிலையில், இதன் வழியாக மக்களின் ஐந்தாண்டு கோரிக்கையான சென்னை தாம்பரம் - கொல்லம் ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வெள்ளிக்கிழமையன்று மாலை 5.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட ரயில், காலை 5.55 மணிக்கு செங்கோட்டை வந்தடைந்த ரயிலை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். கேரள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொடிக்குன்னி சுரேஷ் மற்றும் பிரேமசந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்ட ரயில் 10.30 மணியளவில் கொல்லத்தை அடைந்தது.
அடுத்ததாக வண்டி எண்: 06028, கொல்லம் - தாம்பரம் சிறப்பு ரயில் மார்ச் 31ம் தேதியான இன்று கொல்லத்திலிருந்து மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு, அன்று மாலை 05.30 மணிக்கு கடையநல்லூர் வந்து, மறுநாள் காலை 05.00 மணிக்கு தாம்பரம் போய் சேரும்.
இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம் , விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பகவதிபுரம், தென்மலை, எடமண், புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரை ஆகிய இடங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு நேற்று காலை 08.00 மணிக்கு தொடங்கி நிறைவு பெற்றுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.