உலகப் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக்கும் ஒரு இருக்கை...
சென்னை: உலகப் புகழ் பெற்ற அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக்கும் ஒரு இருக்கை ஒன்றை அமைப்பதில் அங்கே வாழும் மருத்துவர்கள் ஜானகிராமன் மற்றும் திருஞானசம்பந்தம் ஆகியோர் முயற்சிகளை மேற்கொண்டிருப்பது உலகத் தமிழர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது.
ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் பல நூறு மொழிகளுக்கு இருக்கைகள் உண்டு. ஒரு சில லட்சம் பேர் பேசும் உக்ரேனிய, செல்டிக் மொழிகளுக்கு எல்லாம் இருக்கைகள் இருக்கின்றன. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பல கோடிப் பேரின் தாய்மொழியான தமிழுக்கு அங்கே ஒரு இருக்கை இல்லாத நிலை இருந்து வந்தது.

இந்த குறையை நீக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர் அமெரிக்கா வாழ் மருத்துவர்கள் ஜானகிராமனும் திருஞானசம்பந்தனும். இவர்கள் 1970களில் தமிழகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்கள். இவர்களுக்குள் இந்த சிந்தனையை விதைத்தது ஒரு தமிழ் படித்த அமெரிக்கர்.
அவர் பெயர் வைதேகி ஹெர்பெர்ட். இவர் தமிழ் சங்க இலக்கிய நூல்கள் பதினெட்டையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த மேதை.
இவர்தான் முதன் முதலாக மருத்துவர் ஜானகிராமனுக்கு இந்த சிந்தனையை விதைத்தவர். இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் ஜானகிராமனும் திருஞானசம்பந்தனும் ஹார்வார்டு பல்கலைக் கழகத்துடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புதலைப் பெற்றிருக்கின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தரப்பினரும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும் இப்போதுதான் காலம் கைகூடி வந்திருக்கிறது.
இப்படி ஒரு இருக்கை அமைப்பதற்கான செலவுத் தொகை மொத்தம் ரூ40 கோடி. இதில் மருத்துவர்கள் ஜானகிராமனும் திருஞானசம்பந்தனும் கணிசமான நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளனர்.
அடுத்த 2 ஆண்டுகளுக்குள் ரூ40 கோடியைத் திரட்டி கொடுக்க வேண்டும். ஏன் ஒரு ஆண்டில் திரட்டிக் கொடுத்தால் கூட உலகின் புகழ்வாய்ந்த ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் நம் தமிழ் மொழிக்கான இருக்கை அமைந்துவிடும். எஞ்சிய தொகையை உலகத் தமிழர்களிடம் திரட்டிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றனர் இந்த மருத்துவர்கள்.
இதற்காக http://harvardtamilchair.com/ என்ற இணையதளத்தை உருவாக்கி அதன் மூலமாக நிதி திரட்டும் கோரிக்கையை இந்த மருத்துவர்கள் முன்வைத்துள்ளனர்.
உலகின் முதன்மையான ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைந்து தமிழ் பயிற்றுவிக்கப்படுதல் என்பது நாம் தாய்மொழிக்கு நாம் செய்யும் பெரும் பேறு... ஆம் வருங்கால சந்ததியினர் அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் படிக்கும் வாய்ப்பைக் கொடுக்கும் இது.
இதற்கான பங்களிப்பை நாம் அனைவரும் சேர்ந்து செய்வோம் என்பது இதற்கான முயற்சியை மேற்கொண்டு வரும் மருத்துவர்கள் ஜானகிராமன், திருஞானசம்பந்தன் ஆகியோரது வேண்டுகோள்.
நாமும் உதவுவோம்!












Click it and Unblock the Notifications