ஆளுநர் உரையுடன் நாளை சட்டசபை கூடுகிறது: பிப்ரவரி 21ல் பட்ஜெட்

தமிழக சட்டசபையின் நிகழ்ச்சிகள், ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் நாளை ஆளுநர் ரோசய்யா ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துகிறார்.
அதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு, முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசுவார். "30-ந் தேதி அன்று நண்பகல் 12 மணிக்கு சட்டசபை கூட்டப்பட வேண்டும்" என்று ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
நாளை பகல் 11.55 மணிக்கு சட்டசபைக்கு ஆளுநர் வருகை தருகிறார். அவரை மரபுப்படி, சபாநாயகர் தனபால், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் வரவேற்று, சட்டசபைக்குள் அழைத்து வருவார்கள். பின்னர் ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார்.
அதன் மொழியாக்கத்தை சபாநாயகர் தனபால் படிப்பார். அதோடு சட்டசபை நிகழ்ச்சிகள் நிறைவு பெறும். அதன் பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடும். அதில், சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்படும்.
ஆளுநர் உரையில் பொதுவாக அரசு மேற்கொண்ட சாதனைகள், மேற்கொண்டு வரும் திட்டங்கள், புதிதாக கொண்டு வரப்படும் திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும். எனவே புதிய நல்ல திட்டங்களை ஆளுநர் உரையில் எதிர்பார்க்கலாம்.
பிப்ரவரி 21ல் பட்ஜெட்
தமிழக பட்ஜெட் பிப்ரவரி 21-ம் தேதி தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது. வரும் மே மாதத்துக்குள் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிக்கை வெளியாகும். அதன் பிறகு, புதிய அறிவிப்புகளை அரசுகள் வெளியிடமுடியாது. இதை கருத்தில் கொண்டு, வரும் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
பிப்ரவரி 21-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படக்கூடும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இருக்கலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்து ஆலோசிக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 2.45 மணி வரை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தொடர் மற்றும் பட்ஜெட் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications