தமிழக சட்டசபையில் 2016 -17 திருத்தப்பட்ட பட்ஜெட்: நிதியமைச்சர் ஓ.பி.எஸ் தாக்கல்
சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு கூடியது. தமிழக அரசின் 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் அனைவரும் அவையில் அமர்ந்திருந்து ஓபிஎஸ் வாசித்த பட்ஜெட் உரையை கவனித்தனர்.
கடந்த மே 16ம் தேதி தமிழக சட்டசபைக்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள் பதவியேற்றனர்.
புதிய சட்டசபையின் முதல் கூட்டம், ஜூன் 16ம் தேதி நடந்தது. ஆளுநர் ரோசய்யா உரையாற்றினார். பின்னர், ஆளுநர் உரை மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்று சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. காலை 11 மணிக்கு சட்டசபை கூடியதும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடன் பேரவை ஒத்திவைக்கப்படும். அதன்பின்னர், சபாநாயகர் தனபால் தலைமையில் பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இதில், பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது மற்றும் துறை வாரியான மானியக்கோரிக்கைகள் மீது எத்தனை நாள் விவாதம் நடத்துவது என்பது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
அநேகமாக, இந்த தொடர் சுமார் ஒரு மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் என்பதால் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு கவர்ச்சிகரமான புதிய அறிவிப்புகளை வெளியிட அதிமுக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த கூட்டத் தொடரில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. பல பிரச்சனைகளை எழுப்ப உள்ளது. ஏனேனில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்யப்போவதில்லை என திமுக தெரிவித்துள்ளது. எனவே பேரவையில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.