அப்படி போடுங்க.. எடப்பாடிக்கு பறந்து வந்த போன்.. மறுமுனையில் அண்ணாமலை!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசியில் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக அண்ணாமலை தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்ப்பட்டன.
இந்த தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல் மனு தாக்கல் செய்து இருந்தது. இதற்கிடையில், பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை அதிமுக தலைமை வெளியிட்டதால், தேர்தல் அறிவிப்புக்கு கோரி ஓபிஎஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு தீர்ப்பில் அந்த 2 அம்சங்கள்.. இன்னமும் நம்பும் ஓபிஎஸ் கோஷ்டி!
எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பு
இந்த மனுக்களை விசாரித்து இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தது. நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியதால் எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவித்தது. சிறிது நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார்.
அண்ணாமலை வாழ்த்து
எடப்பாடி பழனிசாமிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்தநிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளர். இந்த தகவலை அண்ணாமலை தனது ட்விட்டர் பதில் கூறியிருப்பதாவது: இன்று அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் அண்ணன் எடப்பாடி அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமி அவர்களை தொலைப்பேசி வழியாக தொடர்புகொண்டு எனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பாஜக மோதல்
பாஜகவில் இருந்து சி.டி நிர்மல் குமார் உள்பட முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் அடுத்தடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் இணைந்தார். அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துவிட்டு வந்த இவர்களை அதிமுக அரவணைத்து இருக்கக் கூடாது என்றும் கூட்டணியில் இருந்துகொண்டு அதிமுக செய்வது சரியல்ல எனவும் அண்ணாமலை ஆதரவு பாஜக நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களில் காட்டமாக கருத்து கூறியிருந்தனர். இதன் தொடர்ச்சியாக அதிமுக - பாஜக நிர்வாகிகள் இடையே வார்த்தை போர் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
தொலைபேசியில் தொடர்புகொண்டு..
ஒரு கட்டத்தில் அண்ணாமலையும் அதிமுக கூட்டணிக்கு எதிரான கருத்தை கட்சி நிர்வாகிககளுடனான ஆலோசனையின் போது பேசியதாக செய்திகள் வெளியானது. அடுத்தடுத்த நடைபெற்ற இந்த விவகாரங்களால் அதிமுக - பாஜக கூட்டணிக்குள் சலசலப்பு நிலவியது. இந்த நிலையில், அண்ணாமலை எடபபடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.