ஓ.பி.எஸ் கூட்டும் அமைச்சரவை கூட்டம்- ஸ்ரீரங்கத்திலிருந்து சென்னை திரும்பும் அமைச்சர்கள்!
சென்னை: தமிழகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதற்காக ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டுள்ள அமைச்சர்கள் இன்று சென்னை திரும்புகின்றனர்.
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் இடைத் தேர்தலுக்கான பிரசாரம் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து அமைச்சர்கள் அனைவரும் அங்கு முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெற இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதற்காக இன்று இரவு அமைச்சர்கள் அனைவரும் சென்னைக்கு திரும்புகின்றனர்.
இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டத் தொடரின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் 23 ஆம் தேதி தொடங்குவதாக கூறப்படுகிறது. 23 ஆம் தேதி கூடும் சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றி அறிவிப்புகளை வெளியிடுவார்.
மேலும் அரசின் செயல்பாடுகள் பற்றி ஆளுநர் பேசுவார். பொதுவாக சட்டசபை கூட்டத் தொடர் கூடுவதற்கு முன்பு அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டு விவாதிக்கப்படும். அந்த வகையில் ஆளுநர் உரை பற்றி இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.
தமிழக முதல்வராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்ற முதல்வர் பன்னீர்செல்வம் அக்டோபர் மாதம் முதலாவது அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெறுவது 2வது அமைச்சரவைக் கூட்டமாகும்.