தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி ஜெ.,... சத்துணவு திட்டம் தொடங்கி முதல்வர் வரை
சென்னை: ஜெ. ஜெயலலிதா என்னும் நான்... என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா 6வது முறையாக பதவியேற்கும் ஜெயலலிதா தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்கிறார். 1991ம் ஆண்டு முதல் 2016 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றது வரை ஜெயலலிதா
சட்டசபைத் தேர்தலில், 134 இடங்களை பிடித்து 6 வது முறையாக அரியணை ஏறுகிறார் ஜெயலலிதா. தொடர்ந்து இரண்டு முறை தமிழகத்தை ஆளும் பெருமையையும் எம்.ஜி.ஆருக்குப்பிறகு அவர் பெற்றிருக்கிறார்.
1984 தேர்தலில் அவரது அரசியல் குருவான எம்.ஜி.ஆர் இச்சாதனையை நிகழ்த்தினார். 1984ம் ஆண்டிலும் சரி, 2016ம் ஆண்டிலும் எதிர்கட்சித்தலைவராக அமரும் ஒரு பாக்கியம் கருணாநிதிக்கு கிடைத்துள்ளது.

சரித்திர சாதனை
வெண்ணிற ஆடை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஜெயலலிதா, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் முதல் படத்தில் நடித்து அவருடைய ஹிட் நாயகி லிஸ்டில் இடம் பிடித்தார்.

அரசியல் பிரவேசம்
எம்.ஜி.ஆரின் திரைப்பட கதாநாயகி என்ற அந்தஸ்து நழுவிப்போன பின்னர், திரையுலகில் இருந்து விலகி இருந்த நேரத்தில் அவரது அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது. அவரது ஆசான் எம்.ஜி.ஆர்தான் அரசியலுக்கு அவரை அழைத்துவந்தவர். அன்றுமுதல் இன்றுவரை தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக செல்வாக்குமிக்க தலைவராக திகழ்கிறார்.

கொள்கை பரப்பு செயலாளர்
எம்.ஜி.ஆரின் அழைப்பின் பேரில் 1981ம் ஆண்டு அதிமுகவில் இணைந்த ஜெயலலிதா 1983ல் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரானார்.

சத்துணவு திட்டம்
மதிய உணவு திட்டமான சத்துணவு திட்டத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்த பெருமை ஜெயலலிதாவையே சாரும். 1984ல் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் ஜெயலலிதா.

சூறாவளி பயணம்
1984ம் ஆண்டு எம்ஜிஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதாவிற்கு எதிராக கலகக்குரல் வெடித்தது. ஆனாலும் அசராத ஜெயலலிதா, அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

எம்.ஜி.ஆர் மறைவு
1987 டிசம்பரில் எம்ஜிஆர் இறந்த பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. ஜானகி தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதா தலைமையில் மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். இரட்டை இலை முடக்கப்பட்டதால் ஜானகி இரட்டை புறா சின்னத்திலும், ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும் போட்டியிட்டது.

போடியில் முதல் வெற்றி
1989ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டசபையில் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவராக ஆனார்.

துளிர்த்த இரட்டை இலை
அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைத்து அக்கட்சியின் பொதுச்செயலாளராக 1989ல் தேர்வானார். எம்.ஜி.ஆரின் இரட்டை இலை சின்னமும் அதிமுகவுக்கு மீண்டும் கிடைத்தது. கருணாநிதிக்கு மாற்றான சக்தியாக தன்னை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.

1991ல் முதல்வராக பதவியேற்பு
1991ல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் 225 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. முதல்முறை யாக முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா.

படுதோல்வியை சந்தித்த ஜெ.,
1996 சட்டசபை தேர்தலில் படுதோல்வியடைந்து திமுகவிடம் ஆட்சியை பறிகொடுத்தார். 1998, 1999ல் நடந்த லோக்சபா தேர்தல்களில் அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஜெயலலிதா இருந்தார்.

2முறை முதல்வர் பதவியேற்பு
2001-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 132 தொகுதிகளை அதிமுக கைப்பற்றி 2வது முறையாக முதல்வரானார்.
ஆனால், டான்சி வழக்கில் தண்டனை பெற்றதால் சில மாதங்களில் பதவியை இழந்தார். அந்த வழக்கில் மேல்முறையீடு செய்து விடுதலை ஆனதும், 2002ல் மீண்டும் முதல்வரானார்.

4வது முறை முதல்வர்
இதேபோல 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 69 தொகுதிகளை மட்டுமே அதிமுக கைப்பற்றியது. ஆனால், 2011 தேர்தலில் 152 தொகுதிகளில் வெற்றி பெற்று 4வது முறையாக முதல்வரானார்.

5வதுமுறை முதல்வர்
2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை கிடைத்ததால் கடந்த ஆண்டில் ஜெயலலிதா பதவியை இழக்க நேர்ந்தது. அந்த வழக்கிலும் மேல்முறையீடு செய்து விடுதலையாகி கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 5வது முறையாக மீண்டும் முதல்வரானார்.

6வது முறை முதல்வர்
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம், 6வது முறையாக ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... என்று கூறி முதல்வராக பதவியேற்று தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

காலை சிற்றுண்டி திட்டம்
ஏழை குழந்தைகளுக்கு சத்துணவு திட்டம் வழங்கும் எம்.ஜி.ஆரின் திட்டத்தை மாநிலம் முழுவதும் கொண்டு சேர்த்த ஜெயலலிதா, இப்போது பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை விரைவில் தொடங்கி வைத்து சரித்திரத்தில் இடம் பிடிக்க உள்ளார்.

தவிர்க்க முடியாத சக்தி
தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதாவிற்கு தனி இடம் உண்டு. ஒரு பெண் தலைவராக, 6முறை முதல்வராக பதவியேற்றவர் என்ற சாதனையைப் படைத்து தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்கிறார்.












Click it and Unblock the Notifications