பீடையெல்லாம் ஒழிஞ்சு போச்சு – தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பேச்சு!
நெல்லை: காங்கிரசை சுற்றியிருந்த பீடைகள் விலகியதால் காங்கிரஸ் தப்பி பிழைத்துள்ளது என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் பாளை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது.
இதில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஜி.கே.வாசன் குறித்து கருத்து தெரிவித்தார்.

விட்டுச் சென்ற சிலர்:
அதில், " நம்மை விட்டு சிலர் சென்றிருக்கின்றனர். அவர்களை பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. பெரியாரை வைத்து நான் எனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியிருக்கலாம். ஆனால் அது வெறும் அறிமுகத்திற்குதான்.

கடின உழைப்பு அவசியம்:
என்னுடைய உழைப்பே நான் நிலைத்து நிற்க காரணம். இது போல் அரசியலுக்கு வருபவர்கள் தங்கள் தந்தை, முன்னோர்கள் பெயரை ஒரு அறிமுகத்திற்காக பயன்படுத்தி கொள்ளலாம். கட்சியில் நிலைத்து நிற்க வேண்டுமானால் கடின உழைப்பு தேவை.

நந்திகள் ஒழிந்தன:
காங்கிரஸ் பலவீனப்பட்டு இருந்த நிலையில் நம்மை சுற்றியிருந்த நந்திகள் தற்போது ஓழிந்துள்ளன.

கட்சியின் செல்வாக்கு:
வாக்கு வங்கி என்பது நிலையற்றது. காங்கிரசின் வாக்கு வங்கு 4 சதவீதம் என தெரிவிக்கின்றனர். வாக்கு வங்கியை வைத்து கட்சியின் செல்வாக்கை மதிப்பிட முடியாது.

மோடி அலைப் பிரச்சாரம்:
கடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடி மோடி என பொய் பிரச்சாரம் செய்து ஒரு அலையை உருவாக்கி பாஜக ஆட்சிக்கு வந்து விட்டது. பொய் பிரச்சாரம் செய்த ஹூட்லர், முசோலினி உள்ளிட்ட சர்வதிகாரிகளை மக்கள் தூக்கி எறிவார்கள் என்பது உலகம் அறிந்தது.

மூத்த தலைவர்களை ஒழிக்கும் மோடி:
மோடி ஒரு பக்கம் கட்சியின் மூத்த தலைவர்களை ஒழித்து வருகிறார். மறுபக்கம் மாநிலகட்சிகளை ஓழிக்க திட்டம் போட்டு வருகிறார்" என்று காட்டமாக பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications