மாணவர் வட்ட தடை: ஐஐடி மெட்ராஸ் கடும் விளைவுகளை சந்திக்கும்- காங்கிரஸ் எச்சரிக்கை
சென்னை: அம்பேத்கர்-பெரியார் மாணவர் வட்டத்திற்கு வழங்கப்பட்டிருந்த அங்கீகாரத்தை ரத்து செய்ததை மெட்ராஸ் ஐடிஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்க தவறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சில காலமாகவே இந்திய தொழில்நுட்ப கழகத்தில் பல்வேறு சமூக பிரச்சினைகள் அடிக்கடி தலைதூக்கி வருகின்றன.

மே 7ம் தேதி மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்ட அனாமதேய கடிதத்தின் அடிப்படையில், துறை செயலாளர் கிண்டியிலுள்ள ஐஐடி இயக்குநருக்கு மே 15ம் தேதி, கடிதம் அனுப்பியிருக்கிறார்.கடிதம் கிடைத்த 10 நாட்களுக்குள் அவசர அவசரமாக எழுதப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல், அம்பேத்கர்-பெரியார் மாணவர் வட்டத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்திருக்கிறார். இதைவிட சட்டவிரோத செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.
கிண்டி ஐஐடி மாணவர்கள், சமூக விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு சமூக நீதிக்கு ஆதரவாக போராடுவதை சகித்துக் கொள்ள முடியாத வகுப்புவாத உணர்வு கொண்ட சக்திகள் கடுமையான நடவடிக்கை எடுத்து அதை முடக்கும் வகையில் ஆணை பிறப்பித்துள்ளனர்.

இந்த ஆணைக்கு எதிராக போராட முன்வந்துள்ள கிண்டி ஐஐடி மாணவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அனைத்து வகையிலும் துணை நிற்கும் என்று உறுதி வழங்க விரும்புகிறேன். அம்பேத்கர்-பெரியார் மாணவர் வட்டத்திற்கு வழங்கப்பட்டிருந்த அங்கீகாரத்தை ரத்து செய்ததை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்க தவறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு இளங்கோவன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications