ஜெ.வை சந்தித்த டிஜிபி, கமிஷனர் ஜார்ஜ்- பதவியேற்பு விழா பாதுகாப்பு குறித்து ஆலோசனை?
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, தமிழக காவல்துறை தலைவர் அசோக்குமார், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 8 மாதகாலமாக எந்த அரசு அதிகாரியையும் ஜெயலலிதா சந்திக்காமல் தவிர்த்து வந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், ஐ.பி.எஸ் அதிகரிகளும் போயஸ் தோட்ட இல்லத்திற்கு வருகை தந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து போயஸ் தோட்டம் முன்னர் திரண்டுள்ள அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் அந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
இந்நிலையில் தீர்ப்பை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் அனைவரும் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா இல்லம் முன்பு கூடி உள்ளனர். தீர்ப்பை தொடர்ந்து தலைமை செயலகத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே ஜெயலலிதா வரும் புதன்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையன்று முதல்வராக பதவியேற்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையொட்டி டிஜிபி அசோக்குமார், சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் போயஸ்தோட்ட இல்லத்தில் ஜெயலலிதாவை சந்தித்து பதவி ஏற்பு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதியன்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையாகி வந்த நாள் முதல் அதிகாரிகள் யாரையும் சந்திக்காமல் இருந்தார். தற்போது வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளும் போயஸ் தோட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications