ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது தமிழக அரசு!
26 ஆண்டுகாலம் சிறையில் உள்ள பேரறிவாளனை ஒருமாதம் பரோலில் விடுவிக்க தமிழக உத்தரவிட்டுள்ளது.
சென்னை: ராஜீவ்காந்தி சிறை வழக்கில் 26 ஆண்டு காலம் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் தமிழக அரசு பரோல் அளித்துள்ளது. இதற்கான அரசாணை வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர்கள் வேலூர், புழல் உள்ளிட்ட சிறைகளில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளனர். தண்டனை காலம் முடிந்தும் அவர்களை விடுதலை செய்ய கோரி பல முறை கோரியும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை.
இந்நிலையில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழக சட்டசபையில் எடுக்கப்பட்ட முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு மத்திய அரசு பதிலளிக்காவிட்டால் தமிழக அரசே அவர்களை விடுதலை செய்யும் என்று அப்போதய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். எனினும் அவர்களை விடுதலை செய்ய காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சி நீர்த்துபோனது.

தற்போது பேரறிவாளனின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவரை பரோலில் அனுப்ப வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்தார். எனினும் அதுகுறித்து நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக சட்டசபையில் தனி நபர் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது.
பேரறிவாளனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு வேலூர் சிறைச்சாலைக்கு அனுப்பியுள்ளது. கடந்த 26 ஆண்டுகாலம் சிறையில் அடைப்பட்டுள்ள பேரறிவாளன், முதன் முறையாக ஒரு மாத காலம் பரோலில் சொந்த ஊருக்கு வர உள்ளார்.












Click it and Unblock the Notifications