சட்டம் ஒழுங்கை கெடுப்போரை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை கோபப் பேச்சு!
Recommended Video
சென்னை: தூத்துக்குடி சம்பவத்தை முன்வைத்து தமிழகத்தின் பிற பகுதிகளில் மக்களுக்கு தொல்லை தருவோரை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து 2 நாட்களாக அமைதி காத்து வந்தார் தமிழிசை. தற்போது காட்டமாக பேச ஆரம்பித்துள்ளார். கிட்டத்தட்ட துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவது போல உள்ளது அவரது பேச்சுக்கள்.
டிவிட்டரில் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்த தமிழிசை இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவரது பேச்சு இருந்தது. சென்னையில் தமிழிசை இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
இரும்புக் கரம்
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதேநேரம், இதை காரணமாக வைத்து சென்னை, கடலூர் என அங்கங்கு போராட்டம் நடத்தி சட்டம்ஒழுங்கை சீர்குலைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நினைத்தால் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
வேறு மாதிரி அணுகியிருக்கலாம்
அரசு இந்த பிரச்சினையை வேறு மாதிரிதான் அணுகியிருக்க வேண்டும், அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்க யாருக்கும் உரிமை இல்லை.
உயிரைப் பறிக்கும் அளவுக்கு போயிருக்கக் கூடாது
மாவட்ட ஆட்சியர் மக்களை பார்த்திருக்க வேண்டும், அதை செய்யவில்லை. போராட்டம் நடத்த உரிமை உள்ளது. ஆனால் அப்பாவிகள் உயிரை பறிக்கும் அளவுக்கு போராட்டம் போயிருக்க கூடாது.
முதல்வர் தூத்துக்குடி போயிருக்க வேண்டும்
முதல்வர் தனது அமைச்சரவை குழுவோடு தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டோரை நேரில் போய்ப் பார்த்திருக்க வேண்டும். இது எனது வலிமையான கருத்து. எத்தனை எதிர்ப்பு வந்திருந்தாலும் முதல்வர் தனது அமைச்சர்களோடு தூத்துக்குடிக்கு போயிருக்க வேண்டும்.