பெரியார் மண்ணில் பாஜக கொடியா? அதிமுகவை அழிக்க முயற்சி-நடப்பது கலாசார யுத்தம்: நாஞ்சில் சம்பத் ஆவேசம்
சென்னை: இந்தியா முழுவதும் பாஜகவின் கொடி பறக்கவிட அந்தக் கட்சி முயன்று வருகிறது என்று நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பின்னர், அதிமுகவிற்குள் கோஷ்டி பூசலும் அதிகார சண்டையும் அரங்கேறி வருகிறது. ஏற்கனவே இரண்டாக பிளவுண்ட அதிமுகவில் இருந்து 3வதாக எடப்பாடி பழனிச்சாமி அணி பிரிந்துள்ளது.
அதிமுகவில் குழப்படி நடைபெற்று வருவதில் பாஜகவின் பின்னணி இருக்கிறது என்று அதிமுக அம்மா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக கொடி
இந்தியா முழுவதும் பாஜகவின் கொடியை பறக்கவிட வேண்டும் பாஜகவினர் ஆசைப்பட்டுதான் அதிமுகவை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ள நாஞ்சில் சம்பத், இது ஒரு கலாச்சார யுத்தம் என்று கூறினார்.
தமிழகம் ஒரு தீவு
தமிழகம் காலம் காலமாக ஒரு தீவாகத்தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது என்றும் இங்கு பாஜக காலுன்றுவது மிகக் கடினம் என்று நாஞ்சில் திட்டவட்டமாக கூறினார். மத்திய அரசு எந்த பவர் சென்டரை வைத்து அச்சமூட்டினாலும் தமிழகத்திற்குள் வர முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
எம்ஜிஆரின் தோட்டம்
மேலும், "தமிழகம் பெரியாரின் பூமி. அண்ணாவின் நந்தவனம். எம்ஜிஆரின் தோட்டம். ஜெயலலிதாவின் ஆஸ்பெக்டாஸ் கோட்டை" என்று தமிழகத்தின் பெருமையை பேசிய நாஞ்சில் சம்பத், இதனை கட்டிக் காக்கும் தலைமை பொறுப்பு டிடிவி தினகரனுக்குத்தான் இருக்கிறது என்று தெரிவித்தார்.
கலாச்சார யுத்தம்
திராவிட இயக்க பூமியில் வகுப்புவாத சக்திகள் காலுன்றுவதற்கான வாய்ப்பில்லை என்றும் இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது கலாச்சார யுத்தம் என்றும் கூறிய நாஞ்சில் சம்பத், இந்த யுத்தத்தை டிடிவி தினகரன் தலைமை தாங்கி நடத்துகிறார் என்றும் குறிப்பிட்டார்.