தடபுடல் கறிவிருந்து… கோடிகளில் புரளும் பணம்… ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் சுவாரஸ்யங்கள்
திருச்சி: இடைத்தேர்தல் என்றாலே திருவிழா கோலம்தான். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலும் இதற்கு விதிவிலக்கல்ல. இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெற உள்ளதால் தொகுதிவாசிகள் தவிர பிற மாவட்ட நபர்கள் காலி செய்துவிட்டனர்.
இதனால் மாலைவரை வரை கலகலப்பாக இருந்த ஸ்ரீரங்கம் தொகுதி சத்தமின்றி அமைதியாக காணப்படுகிறது.
ஒரு காலத்தில் இடைத்தேர்தல் நடப்பதே தெரியாமல் இருந்த நிலையில் ‘சாத்தான்குளம்' இடைத்தேர்தலில்தான் முதன்முதலாக வாக்காளர்களுக்கு வசந்தகாலம் தொடங்கியது. அப்போதைய அதிமுக ஆட்சிக்காலத்தில் இலவசங்கள் பறந்தன. தேவன்குளமாக மாற்றுவோம் என்று கூறி எப்படியோ ஆளும்கட்சியான அதிமுக வெற்றி பெற்றது.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற திருமங்கலம் இடைத் தேர்தலில் உச்சக்கட்டத்தை எட்டியது. பணமும், கறிவிருந்தும் சும்மா புகுந்து விளையாடியது. இதனால் ‘திருமங்கலம் பார்முலா' என்று பேசும் அளவிற்கு பிரபலமடைந்தது.
இதனைத் தொடர்ந்து திருச்சி, புதுக்கோட்டை, சங்கரன்கோவில், ஏற்காடு, ஆலந்தூர் என கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2014 மே வரை 5 இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.

எல்லாத்துக்கும் மேலே
ஆனால் திருமங்கலத்தையும், மிஞ்சும் அளவுக்கு ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்காளர்களை மூச்சு முட்ட வைத்துள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். ஸ்ரீரங்கம் தொகுதியில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் திருவிழா போன்றே காட்சியளிக்கிறது.

என்னா காரு…
கிராமப்புறச் சாலைகளில் சர்ர்.... புர்ர் என்று விதவிதமான சொகுசு கார்கள் செல்வதைப் பார்த்து ஆச்சரியத்தில் வாய்பிளக்கின்றனர் கிராம மக்கள். எல்லாம் தேர்தல் வரைக்கும்தான் என்று தெரிந்தாலும் வந்தவரைக்கும் லாபம்தான் என்பதை கொடுப்பதை தவறாமல் வாங்கிக்கொண்டனர்.

தடபுடல் விருந்து
தொகுதியில் தங்கி தேர்தல் பணிகளைக் கவனிக்க வந்தவர்கள், ஒவ்வோர் ஊராட்சியிலும் பந்தல் போட்டு, சமையல்காரர்களை நியமித்து தினந்தோறும் தடபுடல் உணவு சமைத்து சாப்பிடுகின்றனர். சிறு டைலர் கடைகள், சலவை கடைகள் எல்லாம் தற்காலிக மினி டிபன் சென்டர்களாக மாறியது.

அமைச்சர்கள் கூட்டாஞ்சோறு
அமைச்சர் செல்லூர் ராஜு, தனது ஆதரவாளர்களுக்கு லிஸ்ட் போட்டு இன்றைய ஸ்பெஷல் என மூன்று வேளையும் சமைத்துப் போட்டாராம். அமைச்சர்கள் ஒவ்வொருவரும் இ்ஷ்டம்போல் வெளுத்துக் கட்டுகிறார்கள்.

வஞ்சிரமீன் வறுவல்
இதில் கடந்த வாரம் அமைச்சர்கள் கூட்டாக சேர்ந்து வஞ்சிர மீன் வறுவல் ருசித்து சாப்பிட்டதாக ரிப்போர்ட் போனதாம். அடித்த ரிவீட்டில், தைப்பூசத்திலிருந்து இரவு உணவை மட்டும் அமைச்சர்கள் ஒன்றாகத்தான் சாப்பிட்டுள்ளனர். அன்றிலிருந்து சைவ உணவு மட்டும்தான் சாப்பிட்டார்களாம்.

ஓசியில ஏசி போட்டு
காலை ஏழு மணிக்கு பிரச்சாரம் தொடங்கி 11 மணிவரை ஒரு ரவுண்ட் பிரச்சாரம். அப்புறம் ஏசி ரூமில் ரெஸ்ட் மறுபடியும் மேக்அப் போட்டு 4 மணிக்கு மேல் இரவுவரை பிரச்சாரம் என கலந்து கட்டியுள்ளனர் அமைச்சர்கள்.

ரூ.60,35,500 பறிமுதல்
ஸ்ரீரங்கம் தேர்தலையொட்டி நடந்த வாகன சோதனையில் இதுவரை ரூ.60,35,500 பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், 286 வாகனங்கள் பறிமுதல், 349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சொன்னாலும் வாக்காளர்களின் கைகளில் பணம் தாராளமாக புரள்கிறது.

ஒரே கொண்டாட்டம்
ஸ்ரீரங்கத்தில் வாக்காளர்கள் மட்டுமல்ல; வணிகர்களுக்கும் கொண்டாட்டம்தான். பெட்டிக்கடை மற்றும் ஓட்டல்களிலும் விற்பனை படுஜோராக நடந்தது. டாஸ் மாக் கடைகளுக்கு வரும் வாடிக் கையாளர்கள் அனைவருமே ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டுவதால் சில்லறைத் தட்டுப்பாடு அதிகரித்திருப்பதாக சொல்கிறார்கள்.

பணத்திற்கு பஞ்சமில்லை
ஸ்ரீரங்கம் நகரப் பகுதியில் இரு தினங்களுக்கு முன் விடியற் காலையில் வீட்டின் கதவைத் திறந்தபோது பலருக்கு ஆச்சரியம். வாசலில் வேட்டி, சேலைகளுடன், சில நூறு ரொக்கமும் கிடந்துள்ளது.

எவ்வளவு கொடுப்பீங்க
ஸ்ரீரங்கம் தொகுதியின் மொத்த வாக்குச்சாவடிகள் 322. இதில் 34 வாக்குச்சாவடிகள் மீதுதான் அ.தி.மு.கவின் மொத்த கவனமும் குவிந்திருக்கிறது. அங்கேதான் பணம் கரைபுரண்டு ஒடுகிறதாம்.
சில இடங்களில், "என் வீட்டில் 10 ஓட்டுகள் இருக்கின்றன. எவ்வளவு கொடுப்பீர்கள்" என வாக்காளர்களே பேரம் பேசும் சம்பவங்களும் நடந்தது. அவர்கள் வீட்டில் அதிர்ஷ்டமழைதான்.

போடு ஒரு குத்து
அமைச்சர் கோகுல இந்திரா, பிரசாரம் செய்யும் கிராமங்களில் கூட்டம் களைகட்டுகிறது. கூட்டத்தைக்கூட்ட அதிரடித் திட்டம் தீட்டி சென்னையில் இருந்து, குத்தாட்டம் போடும் இளம்பெண்கள் களமிறக்கப்பட்டார்கள். அமைச்சர் கோகுல இந்திரா பிரசாரம் மேற்கொண்ட கிராமங்களில் அமைச்சர்கள் வாகனம் முன் டான்ஸ் கேர்ள்ஸ் குத்தாட்டம் போட்டுக் கூட்டத்தைக் கூட்டினர். டான்ஸ் பார்க்கக் கூட்டம் கூடியதும் அமைச்சர்கள் வந்து வாக்கு சேகரித்துவிட்டுச் சென்றனர்.

எம்.எல்.ஏ போட்ட குத்து
நடிகர் ராமராஜன், மணப்பாறை பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். பொத்தமேட்டுப்பட்டி எனும் இடத்தில் ராமராஜன் வருகை கொஞ்சம் காலதாமதமாக, கூட்டம் கலைந்து செல்வதைத் தடுக்க, கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம் பாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஆறுக்குட்டியும் அவரது ஆதரவாளர்களும் குத்தாட்டம் போட்டாராம்.

ஆரத்திக்கு 500
இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அமைச்சர்கள் வெளிப்படையாக தங்கள் பாக்கெட்டில் கைவிட்டு, 500 ரூபாய் நோட்டுகளை வெளியில் எடுத்து ஆரத்தி தட்டுகளில் போடுகிறார்கள். டோக்கனை முதலில் கொடுத்து இருட்டிய பிறகு ரகசிய இடத்துக்கு வரவழைத்து பணத்தைக் கொடுத்து ஸ்ரீரங்கம் வாக்காளர்களை பண மழையில் மூழ்கடித்து விட்டனராம்.

ரங்கநாதர் மேல சத்தியமா
அதேபோல தி.மு.கவினரும் ரகசியமாகப் பணத்தை கொடுத்து முடித்துவிட்டனராம். இரண்டு தரப்புமே செய்த ஒரே விஷயம் சாட்சிக்கு ஸ்ரீரங்கம் பெருமாளை இழுத்ததுதான்! பணத்துடன் ஸ்ரீ ரங்கநாதர் படத்தையும் கொடுத்து அதன் மீது சத்தியத்தையும் வாங்கிக்கொண்டார்களாம்.

ஓ.பின்ன என்ன தெரியுமா?
கடைசி கட்ட பிரச்சாரத்திற்கு வந்த ஸ்டாலின் அடிக்கடி பணப்பட்டுவாடா பற்றிதான் பேசினார். ஓ.பின்னா என்ன தெரியுமா? அவுட் பேசண்ட். இப்ப இருக்கிற முதல்வரும் ஓ.பி தான் அவரு ஏன் திருச்சிக்கு வந்தாருண்ணே தெரியலை என்று பேசவும். இரண்டாயிரம் என்று ஒரு தொண்டர் கத்தினார். அங்க பாருங்க... இரண்டாயிரமோ, ஐயாயிரமோ தொகுதி மக்களுக்குத்தான் தெரியும் என்று பிட்டைப் போட்டார்.

பாஜக புகார்..
என்னதான் மாறி மாறி புகார் சொன்னாலும் பண விஷயத்தைப் பொறுத்தவரை இரண்டு கட்சிகளும் ஜென்டில்மேன் அக்ரிமென்ட் போட்டுக்கொண்டு பட்டுவாடா செய்கிறார்கள்' என்று பாஜகவினர் புகார் சொல்லியிருக்கின்றனர். பாஜக வேட்பாளரிடம் இருந்து கஜானா திறக்கவில்லை என்பதால் கட்சியினர்தான் சோர்வடைந்துவிட்டனர்.

134 புகார்கள்
இடைத் தேர்தல் தொடர்பாக திருச்சியில் உள்ள மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 18004257030 என்ற இலவச போன் எண் மூலம் 134 புகார்கள் வந்தன. அவை உரிய முறையில் கவனத்தில் எடுக்கப்பட்டன. இதுதவிர, தலைமைத்தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கென்று தனியாக 24 மணிநேரமும் இயங்கும் 1950 என்ற இலவச எண்ணுக்கு, ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் தொடர்பாக 21 புகார்கள் வந்தன. அவை திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியின் நடவடிக்கைக்காக உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா.

நோ ரியாக்சன்
'முதல்வர் பன்னீர்செல்வம் திருச்சி வந்த பிறகுதான் பணம் கை மாறியிருக்கிறது. அவர் தங்கியிருந்த அறையில்தான் இதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று முன்னாள் அமைச்சர் நேரு, தி.மு.க சட்டத் துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் இடைத்தேர்தல் சிறப்புப் பார்வையாளர் அனில் குமார் ஜாவிடம் மனு கொடுத்தனர். அதற்கும் இதுவரை எந்தப் பதிலும் இல்லை!' திமுகவினர் மீது அதிமுகவினர் மீது திமுகவினரும் மாறி மாறி புகார் கொடுத்தும் எந்த ஆக்சனோ, ரியாக்சனோ இல்லை என்கின்றனர்.

தனி ஆளாய் டிராபிக்
ஆள் அம்பு படை பலம், பணபலத்திற்கு இடையே தனி ஆளாய் மைக் பிடித்து வாக்கு சேகரிக்கிறார் டிராபிக் ராமசாமி. பேனாமுனை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அழகே தனிதான். ஊழல், பணப்பட்டுவாடா பற்றி புகார்களை குவித்து தள்ளுகிறார் டிராபிக் ராமசாமி.

போலீஸ் பாதுகாப்பு
திருச்சி மாநகர காவல்துறை ஆணையரை மாற்றவைத்த காரணத்தினால் செம கடுப்பில் இருந்த அதிமுகவினர் அவரை வம்புக்கு இழுக்காமல் இல்லை. இதனால் பாதுகாப்பு சகிதமாக வலம் வருகிறார். அதேபோல சில சுயேச்சை வேட்பாளர்களும் தங்கள் பங்குக்கு பிரச்சாரத்தை

அமைதியான ஸ்ரீரங்கம்
ஒருவழியாக கத்தி கத்தி வாக்கு சேகரித்த வாய்கள் ஓய்ந்துவிட்டன. நாளை மறுதினம் வாக்குப்பதிவு என்பதால் அதற்கான பணிகளை கவனிக்க தேர்தல் ஆணையம் தயாராகிவிட்டது. மாலை 5 மணியுடன் கூடாரங்களை காலி செய்து கிளம்பிவிட்டனர் வெளிமாவட்ட நபர்கள். ஊரில் திருவிழா முடிந்தபின் ஒருவித அமைதி நிலவுமே அந்த நிலையில் இருக்கிறது ஸ்ரீரங்கம் தொகுதி.












Click it and Unblock the Notifications