இருட்டில் இருந்த தமிழகத்தை வெளிச்சமாக்கியது அதிமுக அரசு: சட்டசபையில் ஜெ., பேச்சு
சென்னை: திமுக ஆட்சியில் இருட்டிலிருந்த மாநிலத்தை வெளிச்சமூட்டியது அதிமுக.அதிமுக ஆட்சியில் மாநிலம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. தமிழகம் மின்மிகை மாநிலம் என்பது மாய தோற்றமல்ல. உண்மைத்தோற்றம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
திமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதாக, முதலமைச்சர் ஜெயலலிதா விமர்சனம் செய்துள்ளார்.

சட்டசபையில் இன்று எரிசக்தி துறை, மது விலக்கு ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் வில்லிவாக்கம் தி.மு.க. எம்.எல்.ஏ. ரங்கநாதன் பங்கேற்று பேசினார்.
தலைவர் கலைஞர் தான் எரிசக்தி துறையில் மாற்றத்தை ஏற்படுத்தினார். மூன்றாவது முறையாக அவர் முதல்வராக இருந்தபோது சிறு-குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் தங்கமணி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.தான் முதன் முதலாக சிறு-குறு விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின்சாரம் கொடுத்தார என்றார்.
துரைமுருகன் எழுந்து அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் கொடுத்தது கலைஞர்தான் என்றார். அப்போது ரங்கநாதன்கைத்தறி நெசவாளர்களுக்கு முதன் முதலாக 100 யூனிட் மின்சாரம் கொடுத்ததும் கலைஞர்தான்.
விசைத்தறிக்கு 500 யூனிட் மின்சாரம் கொடுத்ததும் தி.மு.க. ஆட்சியில் கலைஞர்தான். இப்போது 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்கிறீர்கள். இது வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கா? அல்லது எல்லோருக்குமா? என்று கேட்டார் ரங்கநாதன்.
அமைச்சர் தங்கமணி எழுந்து, உங்களுக்கும் உண்டு. அனைவருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் உண்டு என்று கூறினார். அமைச்சர் தங்கமணியும், ரங்கநாதன் எம்.எல்.ஏ.வும் மாறி மாறி வாக்குவாதம் செய்தனர். அப்போது துரைமுருகன் திடீரென எழுந்து ஒரு பிரச்சினையை கிளப்பினார்
சட்ட சபையில் இங்கே விவாதம் நடக்கும் போது, அந்த துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டசபைக்குள் உட்கார்ந்து இருக்க வேண்டும். ஆனால் யாருமே வரவில்லை. அவர்களுக்காக போடப்பட்ட நாற்காலிகள் காலியாக கிடக்கிறது. இது சபையை அவமதிக்கக் கூடிய தாகும். உறுப்பினர்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய அவமானமாகும் என்று துரைமுருகன் கூறினார்.
அப்போது சபாநாயகர் அதிகாரிகள் அருகில் உள்ள காபினெட் அறையில்தான் உள்ளனர் என்றார். அதற்கு துரைமுருகன், அப்படியானால் அவர்கள் அறையில் இருக்க வேண்டியதுதானே? அதிகாரிகள் இங்கு உடனே வர வேண்டும் என்றார். விவாதம் நடந்தபோது அதிகாரிகள் துறை செயலாளர்கள் உடனே சட்டசபைக்குள் ஓடி வந்தனர். நாற்காலிகளில் அமர்ந்தனர்.
அமைச்சர் தங்கமணி நான் தி.மு.க.வின் 5 ஆண்டு ஆட்சியில் எதனால் மின்உற்பத்தி குறைந்தது என்று கேட்டேன்.அதற்கு பதில் சொல்லாமல் அதிகாரிகள் ஏன் சபைக்கு வரவில்லை என்று துரைமுருகன் திசை திருப்புகிறார் என்று கூறினார். அவையில் அமளி துமளி ஏற்பட்டது. சட்டசபையில் நடந்த நிகழ்ச்சிகளை அதிகாரிகளுக்கு மட்டும் நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சட்டசபை நிகழ்ச்சிகளை வேறு எங்கும் நேரடியாக ஒளிபரப்பக் கூடாது. ஆனால் நீங்கள் பக்கத்து அறையில் பார்க்க வசதி செய்துள்ளீர்கள். இது பெரிய குற்றம். இந்த குற்றத்தை நீங்களே செய்திருக்கிறீர்கள் என்று சபாநாயகரைப் பார்த்து துரைமுருகன் கூறினார்.
என் அனுமதி வாங்கித்தான் அங்கு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது என் உரிமை. பேரவைத் தலைவரின் அதிகாரமாகும். எனவே பேரவைத் தலைவர் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது. அதை ஏன் என்று நீங்கள் கேட்கவும் முடியாது. இதில் எந்த தவறும் இல்லை என்று தனபால் கூறினார்.
ஸ்டாலின் தொடர்ந்து ஒளிபரப்பு தொடர்பாக சில வார்த்தைகளை கூறினார். சபாநாயகர் அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இதற்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். துரைமுருகன் கடும் ஆவேசம் அடைந்தார்
ஸ்டாலின் பேசியதை நீக்கியது சரிதான். ரங்கநாதன் தொடர்ந்து பேசலாம் என்றார் சபாநாயகர். இந்த பிரச்சினை காரணமாக சட்டசபையில் இன்று சுமார் 20 நிமிடங்கள் கடும் அமளி ஏற்பட்டது.
அப்போது முதல்வர் ஜெயலலிதா சபைக்குள் வந்தார். அந்த சமயம் மு.க.ஸ்டாலின் தனது பேச்சை சபை குறிப்பில் இருந்து நீக்க கூடாது என்று வலியுறுத்தினார். அவர் கோரிக்கை ஏற்கப்படவில்லை இதனால் சட்டசபையில் இருந்து ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
இதே போல காங்கிரஸ் உறுப்பினர்களும், முஸ்லிம் லீக் உறுப்பினரும் வெளிநடப்பு செய்தனர்.
முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் பேசினார். அப்போது அவர், திமுக ஆட்சியில் இருட்டிலிருந்த மாநிலத்தை வெளிச்சமூட்டியது அதிமுக.அதிமுக ஆட்சியில் மாநிலம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. தமிழகம் மின்மிகை மாநிலம் என்பது மாய தோற்றமல்ல. உண்மைத்தோற்றம். மத்திய மின்சாரம் வாரியம் தமிழகத்தை மின் உபரி மாநிலமாக குறிப்பிட்டுள்ளது.
திமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தபடியே தனியாரிடம் மின்சாரம் வாங்கப்படுகிறது. உண்மை தெரியாமல் திமுகவினர் பேசுவது கால்பந்து விளையாட்டில் சேம்சைடு கோல் போடுவது போல் உள்ளது. தி.மு.க., ஆட்சியில் மின்சார துறையில் அனைத்து தவறுகளும் செய்தனர். அ.தி.மு.க., ஆட்சியில் அனைத்து தவறுகளையும் சரி செய்து மின்மிகை மாநிலமாக மாற்றினோம். தவறு அவர்கள் பக்கம் உள்ளதால், அமைச்சரின் பதிலடியை பொறுக்க முடியாமல் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மின்துறை விளக்கக்குறிப்பை படித்திருந்தால் குழப்பம் ஏற்பட்டிருக்காது எனக்கூறினார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications