"சுற்றுலாவில் நம்பர் 1".. தாஜ்மஹாலை முந்தியது மாமல்லபுரம்.. 1 ஆண்டில் வந்த பயணிகள் எவ்வளவு தெரியுமா?
செங்கல்பட்டு: கொரோனா தொற்று உலகம் முழுவதும் மக்களை வீடுகளுக்குள் முடக்கிய நிலையில், சுற்றுலாத்தலங்கள் பூனைகள் உலவும் கைவிட்ட வீடுகளை போல காட்சியளித்தன.
ஆனால் தற்போது தொற்று பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வந்துள்ள நிலையில், சுற்றுலாத் தலங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்தியாவில் இந்த கூட்டம் மாமல்லபுரத்தை நோக்கி படையெடுத்துள்ளன.
இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் தாஜ்மஹாலை விட மாமல்லபுரத்திற்கு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீண்டும் திருவிழா கோலம் பூண்ட மாமல்லபுரம்; சர்வதேச காற்றாடித் திருவிழா தொடங்கியது
சுற்றுலாத்தலங்கள்
சென்னையிலிருந்து சுமார் 60 கிமீ தொலைவில் உள்ள மாமல்லபுரத்தில் 8ம் நூற்றாண்டை சேர்ந்த குடைவரை கோயில்கள், புடைப்பு சிற்பங்கள், வெண்ணெய் பந்து என பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன. மேற்குறிப்பிட்டதைப்போல கொரோனா தொற்றால் முடங்கியிருந்த உலகம் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று இயங்க தொடங்கிய நிலையில், இந்தியாவில் வெளிநாட்டு பயணிகள் அதிகம் பார்வையிட்ட சுற்றுலாத்தலங்களில் முதன்மையானதாக மாமல்லபுரம் இருக்கிறது.
மாமல்லபுரம்
இது குறித்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஓராண்டில் தாஜ்மஹாலை 38,922 வெளிநாட்டு பயணிகள் பார்த்து ரசித்துள்ளனர். ஆனால் மாமல்லபுரத்தை 1,44,984 பேர் பார்த்து பரவசம் அடைந்துள்ளனர். இது மட்டுமா என்று பார்த்தால் கிடையாது, வெளிநாட்டு பயணிகளின் கவனத்தை ஈர்த்த சுற்றுலாத்தலங்களில் தென்னிந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க பகுதிகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளதை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் உறுதி செய்துள்ளன. அதாவது வெளிநாட்டு பயணிகளை அதிகம் ஈர்த்த முதல் 10 இடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 இடங்கள் இடம்பெற்றுள்ளன.
முருகன் கோயில்
மாமல்லபுரத்தையடுத்து சாளுவன்குப்பம் முருகன் கோயில் பெரும்பாலான பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. உண்மையில் இந்த இடத்தில் கோயில் தற்போது முழுமையானதாக இல்லை. கோயிலின் மிச்ச சொச்சங்கள் மட்டுமே உள்ளது. ஆனால் இந்த கோயில் கிமு 3ம் நூற்றாண்டின் கட்டிடக்கலையை பிரதிபலிப்பதாக இருப்பதால் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. மட்டுமல்லாது தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட முருகன் கோயில்களில் இதுதான் மிகவும் பழமை வாய்ந்தது. கடந்த 2005ல் இக்கோயில் கண்டுபிடிக்கப்பட்டது.
கோட்டை
மாமல்லபுரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள இக்கோயிலுக்கு கடந்த ஓராண்டில் சுமார் 25,579 பேர் வந்து சென்றுள்ளனர். இதனையடுத்து செஞ்சி கொட்டைக்கு அதிக வெளிநாட்டு பயணிகள் வந்து சென்றுள்ளனர். 12-13ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோட்டை, தமிழ்நாட்டில் நல்ல நிலைமையில் இருக்கும் சில கோட்டைகளில் ஒன்று. இந்த கோட்டை எத்தனையோ போர்களை சந்தித்திருந்தாலும், இன்னமும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. இந்த கோட்டைக்கு 10,483 வெளிநாட்டு பயணிகள் வந்து சென்றுள்ளனர்.
சித்தன்னவாசல்
அதேபோல திருமயம் மலைக்கோட்டை அருங்காட்சியகத்திற்கு 8,422 பேரும், புதுக்கோட்டை சித்தன்னவாசல் தலத்திற்கு 5,432 பேரும் வந்து சென்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டினர்களில் 12.21% பேர் தாஜ்மஹாலை பார்த்திருக்கிறார்கள் என்றால், 45.5% பேர் மாமல்லபுரத்தை பார்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.