முல்லைப் பெரியாறில் அணை கட்ட மத்திய அரசு துணை போவதா? – வேல்முருகன் கண்டனம்
சென்னை: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு துணை போவதா என்று மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், "முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதால் ஏற்படும் சுற்றுச் சூழல் தாக்கம் குறித்து ஆராய கேரளா மாநில அரசுக்கு இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி தென் தமிழக மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டப் போவதாக கேரளா அரசு அறிவித்தது. இதற்காக 2007 ஆம் ஆண்டில் ரூபாய் 25 கோடி ஒதுக்கப்பட்டு சர்வே பணி நடந்தது. அப்போது இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் இந்தப் பணி நிறுத்தப்பட்டது.
இருப்பினும் தமிழகத்தின் எதிர்ப்பை, உச்சநீதிமன்ற உத்தரவுகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு கேரளா தொடர்ந்து புதிய அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கும் தொடர்ந்துள்ளது.
இதனைப் பற்றியெல்லாம் கவலைப்படாத கேரளா கடந்த மாதம் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தது. அதில் புதிய அணை கட்டுவதற்கு அனுமதி கோரியிருந்தது.
தற்போது மத்திய அரசும், புதிய அணை கட்டுவதால் ஏற்படும் சுற்றுச் சூழல் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு கேரளாவுக்கு அனுமதி அளித்துள்ளது. இத்தகைய அனுமதியின் மூலம் கேரளா புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு துணையாக இருக்கிறது என்பது அம்பலமாகியுள்ளது. மத்திய அரசின் இந்த செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நதிநீர் கிடைப்பதை உறுதி செய்வதற்கான காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்காமல் இதுவரை மத்திய அரசு துரோகம் செய்து வருகிறது; தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாகக் கூறிக் கொண்டு பம்மாத்து வேலைகளைத்தான் மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது.
தற்போது முல்லைப் பெரியாறில் புதிய அணையே கட்டிக் கொள்ள கேரளாவுக்கு அனுமதி அளிக்கிறது. இப்படி ஒட்டுமொத்த தமிழகத்தின் வாழ்வுரிமைகளுக்கு துரோகம் இழைத்து தமிழினத்தின் வாழ்வாதார உரிமைகளை குழிதோண்டிப் புதைக்கிற மத்திய அரசின் வஞ்சகத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.
கேரளாவுக்கு கொடுத்துள்ள தற்போதைய அனுமதியை மத்திய அரசு உடனே திரும்பப் பெறாவிட்டால் தென் தமிழகத்து மக்கள் மீண்டும் போர்க்கோலம் பூண நேரிடும் என்பதையும் மத்திய அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications