20 தமிழர்கள் பலி எதிரொலி: ஆந்திர பஸ்கள் மீது தாக்குதல்... பெட்ரோல் குண்டு வீச்சு!
சென்னை : திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆந்திர மாநில பேருந்துகள் உடைக்கப் பட்டுள்ளன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உருவப்படமும் சில இடங்களில் எரிக்கப் பட்டது. ஆந்திரப் பேருந்து ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் உள்ள ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நேற்று காலை நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 20 தமிழக தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக- ஆந்திர மாநில எல்லையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி, தடாவில் ஆந்திர மாநில அரசுப் பேருந்துகள் உடைக்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆந்திரப் பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டன.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் இருந்து சித்தூருக்கு சென்று கொண்டிருந்த ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்து மீது இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் சரமாரியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், பேருந்தின் முன், பின்பக்கக் கண்ணாடிகள் உடைந்தன.
அப்போது, அந்த வழியாக சென்னையில் இருந்து திருப்பதிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து வந்தது. அதன் மீதும், மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்கினர். இதில், அந்தப் பேருந்தின் கண்ணாடிகளும் உடைந்தன. இதையடுத்து, அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இத்தாக்குதல் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போலீசார், விசாரணை நடத்தினர்.
இதேபோல, ஆந்திர மாநிலம், ஆத்மகூரில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி 45 பயணிகளுடன் வந்த அம்மாநில அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து தமிழக எல்லையான ஆரம்பாக்கத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஆந்திரப் பகுதியான தடா அருகே வந்தபோது 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 மர்ம நபர்கள் பேருந்தை முந்திச் சென்று வழிமறித்து நிறுத்தி, உருட்டுக் கட்டைகள், கத்தி போன்றவற்றால் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி, பக்கவாட்டுக் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். மேலும், அந்த பேருந்து மீது பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் குண்டுகள் வெடிக்கவில்லை. இதனால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இச்சம்பவத்தால் ஆந்திரம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் சின்னம்பேடு பகுதியில், அடையாளம் தெரியாத நபர்கள் தமிழக அரசு பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து இவ்வாறு மர்மநபர்கள் தாக்குதல் நடத்தி வருவதால் தமிழக- ஆந்திர மாநில எல்லையான திருவள்ளூர் மாவட்டப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், திருவள்ளூர் மாவட்டம் வழியாக இயக்கப்படும் ஆந்திர மாநில பேருந்துகள், ஆந்திர வங்கிகள் ஆகியவற்றை போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையிலிருந்து ஆந்திராவிற்கு இயக்கப்படும் சுமார் 60 பேருந்துகள் நேற்று மாலை முதல் முழுவதுமாக நிறுத்தப்பட்டு கோயம்பேட்டில் போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, வேலூர், திருத்தணி ஆகிய பகுதிகளிலிருந்தும் ஆந்திர அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
ரயில்களிலும் பாதுகாப்பு:
இதேபோல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் வழியாக திருப்பதிக்குச் செல்லும் மின்சார ரயில்களிலும் ரயில்வே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பேருந்துகள் சிறைபிடிப்பு:
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் திருப்பதிக்குச் செல்வதற்காக நின்றிருந்த 3 ஆந்திர மாநில அரசுப் பேருந்துகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை சமரசப் படுத்தினர்.
இதேபோல், நெய்வேலியில் திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்று கைதாகினர் . இப்போராட்டத்தில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications