ஜல்லிக்கட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது - தமிழிசை
ஜல்லிக்கட்டு பற்றி உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ள கருத்து அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் கோரினர்.
தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இவ்விகாரத்தில் உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது தெரிவித்தனர். இவ்வழக்கில் தற்போது தான் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கல் பண்டிகைக்குள் தீர்ப்பு வழங்க இயலாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்து குறித்து ஊடகத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வலுவான வாதத்தை எடுத்து வைத்தாக கூறினார். உச்சநீதிமன்றம் தமிழக மக்களுக்கு ஆதரவான தீர்ப்பளிக்கும் என்று நம்பியிருந்தோம். மத்திய அமைச்சர் மிகத் தெளிவாக அதைக் கூறியிருந்தார்.
நீதித்துறையின் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மீண்டும் உச்சநீதிமன்றத்தில் கருத்துக்களை எடுத்து வைப்பது குறித்து ஆராயப்படும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
நீதித்துறை மக்களின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும். உயிர்போகும் பிரச்சினையில் உடனடியாக தீர்ப்பளிக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து தீர்ப்பு அளிப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை. நீதிபதிகள் இதை உணர வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அவசர சட்டம் உள்ளிட்ட மத்திய அரசு என்ன திட்டம் கொண்டு வந்தாலும் அது அடிபட்டுப் போகும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தீர்ப்பு வரும் முன் அவசர சட்டம் கொண்டு வர இயலாது என மத்திய அரசும் திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றமும் தற்போது விரைந்து தீர்ப்பு வழங்க முடியாது என கூறியுள்ளது. இதனால் சட்டரீதியாக அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடத்த முடியாது என்பதால் மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கவலையடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications