ஜல்லிக்கட்டுக்கு தடை... உச்சநீதிமன்றத்தின் உத்தரவு கவலை தருகிறது - தமிழிசை சவுந்தரராஜன்
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது கவலையளிக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
மதுரை: 2014ம் ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வீட்டு விலங்கான காளையை கொடுமைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு என்ற பெயரில் வீட்டு விலங்கான காளையை கொடுமைப்படுத்தப்படுவதாக நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹித்டன் நாரிமன் கூறினர். இது மதம் தொடர்பான விளையாட்டு அல்ல என்று கூறியதோடு தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கருத்து கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக விலங்குகள் நலஅமைப்பினர் அவர்களது வாதத்தை எடுத்து வைத்துள்ளனர். அதேசமயத்தில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு என மத்தியஅரசு தனது வாதத்தை எடுத்து வைத்தது. தமிழக அரசும் தனது வாதத்தை எடுத்து கூறியது. எனினும் தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது கவலை தருகிறது. ஜல்லிக்கட்டு தடைக்கு விலங்கு நல ஆர்வலர்களே காரணம் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
எங்களின் கொள்கை ரீதியான முடிவு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதுதான். சட்டரீதியாக போராட்டம் நடத்தில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.