ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்... விஜயகாந்த்தை சந்தித்தார் தமிழிசை
சென்னை: பாஜக கூட்டணியில் அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்படும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தராஜன் இன்று கட்சி நிர்வாகிகளுடன் போய்ச் சந்தித்துப் பேசினார்.
பாஜக கூட்டணியில் விஜயகாந்த் அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் சென்னையில் நடந்த ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத் திருமண விழாவுக்கு வந்த பாஜக தலைவர் அமீத் ஷாவை சந்திக்காமலயே போய் விட்டார் விஜயகாந்த். இது பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மேலும் ஒரு குழப்பமாக சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, திடீரென அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை வீடு தேடிப் போய்ப் பார்த்து விட்டு வந்தார். இந்த சந்திப்புக்கான காரணம் குறித்து இதுவரை பாஜக விளக்கவில்லை. தமிழக பாஜக தலைவர்களே இதை எதிர்பார்க்கவில்லை.
இந்த நிலையில் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடலாம் என்று ஒரு தகவல் வெளியாகியது. மேலும், திமுகவும், தேமுதிகவின் ஆதரவைப் பெற முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இத்தேர்தலில் பாஜகவும் போட்டியிடுகிறது. தனது வேட்பாளரை இறுதி செய்து விட்டாலும், அதை அறிவிக்க முடியாமல் உள்ளது. காரணம், முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கும் தேமுதிகவின் போக்கால்.
ஏற்கனவே பாஜகவுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தனது ஆதரவை தெரிவித்துவிட்டது. புதிய நீதிக்கட்சியும், இந்திய ஜனநாயக கட்சியும் பா.ஜ.க.வுடனான நல்லுறவை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளதால், அவர்களும் ஆதரவை தொடர்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தேமுதிகதான் எதையும் பேசாமல் கம்மென்று இருக்கிறது. இந்த நிலையில், விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளருமான மோகன்ராஜூலு விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இன்று தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் கோயம்பேடு விரைந்தனர். அங்கு தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் விஜயகாந்த்தைச் சந்தித்துப் பேசினர். அப்போது ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் தொடர்பாக அவர்கள் விஜயகாந்த்துடன் ஆலோசனை நடத்தினர்.












Click it and Unblock the Notifications