தமிழிசை சௌந்தரராஜன்- விஜயகாந்த் திடீர் சந்திப்பு.... பரபர பின்னணி தகவல்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வியாழக்கிழமை இரவு சந்தித்தார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது. அப்போது விஜயகாந்தின் மனைவி பிரேமலதா உடன் இருந்தார்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, பிப்ரவரி 2வது வாரத்தில் நடைபெறவுள்ள தனது மகனின் திருமண விழாவில் பங்கேற்குமாறு விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்ததாக கூறினார்.
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜவை பொறுத்தவரை அக்கட்சி தலைவர்கள் தேமுதிகவை கூட்டணியில் தக்க வைத்து கொள்ள போராடி வருகின்றனர். இதற்காக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து தங்கள் கூட்டணிக்கு வருமாறு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால், விஜயகாந்த் இந்த அழைப்பை ஏற்கவில்லை.

விஜயகாந்த் - தமிழிசை சந்திப்பு
பாஜக தலைவர் தமிழிசை வியாழக்கிழமையன்று இரவு தேமுதிக தலைவர் விஜயகாந்தை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது. சந்திப்பின் போது விஜயகாந்த் மனைவி பிரேமலதா உடனிருந்தார்.

திருமணத்திற்கு அழைப்பு
பாஜக தலைவர் தமிழிசை மகன் திருமணம் வருகிற 14ம் தேதி நடக்கிறது. இதில், பங்கேற்குமாறு தமிழிசை பத்திரிகையளிக்க விஜயகாந்த் இல்லத்திற்கு சென்றார். சட்டசபை தேர்தல் நிலவரம் குறித்து அப்போது 2 பேரும் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. பாஜக தலைவர் தமிழிசை தேமுதிகவை மீண்டும் கூட்டணிக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திடீரென்று விஜயகாந்தை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநாட்டிற்கு அழைப்பு?
மேலும் பிப்ரவரி 2ம் தேதி கோவையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு விஜயகாந்துக்கு அழைப்பு விடுக்கவே தமிழிசை சவுந்தரராஜன், விஜயகாந்தை சந்தித்ததாக பாஜக வட்டாரம் தெரிவிக்கின்றது. அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 2ம் தேதி பிரதமர் மோடி கோவை வருகிறார். அங்கு நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

கூட்டணி பேச்சு வார்த்தை
இக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் பங்கேற்கிறார். எனவே, இக்கூட்டத்தில் தேமுதிக, பாமக கட்சித் தலைவர்களை பங்கேற்கவைத்து தற்போது நிலவும் கூட்டணி இழுபறிக்கு முடிவு கட்டவே இந்த சந்திப்பு என பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஞ்சியில் மாநாடு
பிரதமர் நரேந்திர மோடியின் கோவை வருகை, தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் நேற்று அறிக்கை வெளியிட்ட விஜயகாந்த், பிப்ரவரி 20ம் தேதி காஞ்சிபுரத்தில் தேமுதிக மாநாடு நடைபெறும் என்றும் அது தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications