ஜெயலலிதாவிற்கு கிடைத்த நிம்மதி தமிழக மக்களுக்கும் கிடைக்கணும்- தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கின் நீதிமன்ற தீர்ப்பில் பா.ஜ.க தலையீடு இல்லை என்றும், ஜெயலலிதாவுக்கு கிடைத்த நிம்மதி தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது குறித்து தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீதிமன்ற தீர்ப்பு வந்திருக்கிறது. எது எப்படி இருந்தாலும் இந்த தீர்ப்பில் வெற்றி பெற்றதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் இத்தனை ஆண்டுகள் நடந்த வழக்கு, இத்தனை சாட்சிகள், இதற்கு முன்னால் வந்த தீர்ப்பின்படி கடுமையான தண்டனை, பின்பு ஜாமீன், பின்பு விடுதலை. இவையெல்லாம் நடந்து வருகிறது. இவை ஒவ்வொன்றும் ஆழமாக சிந்திக்க வைக்கிறது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று ஆச்சார்யா சொல்லியிருக்கிறார்.

நமக்குள்ள கவலை எல்லாம் குற்றம் செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கக்கூடாது. செய்யாதவர்கள் தண்டனை அடைந்து விடக்கூடாது என்பதே முறையான நீதியின் தன்மையாக இருக்க வேண்டும். நடந்தது ஊழல் வழக்கு, வழக்கமாக தமிழகத்தில் ஊழலும் நடந்து வருகிறது என்பதற்கு ஒவ்வொரு துறையிலும் இன்று வெளியாகும் தகவல்கள் நமக்கு உணர்த்துகிறது.
இந்த தவறுகள் எங்கே நடக்கிறது, ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து தவறுகள் களையப்பட்டு ஊழல் வழக்கில் தலை குனிந்த தமிழகம் இனிமேலாவது ஊழல் ஒழிப்பில் முதன்மை பெற வேண்டும் என்பதே என் விருப்பம். வழக்குகள் தொடர்ந்து கொண்டிருக்கட்டும். ஆனால் வழக்கமாக தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய தேவைகளும், சேவைகளும் கிடைக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக இருக்கிறது.
இந்த தீர்ப்பில் மட்டுமல்ல எந்தத் தீர்ப்பிலும் பா.ஜனதா கட்சியின் தலையீடு இல்லை என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்னை பொறுத்தவரையில் ஜெயலலிதா இதற்கு முன்னால் எப்படி இருந்தாரோ! இறைவனின் அருளால் நீதிமன்றம் ஒரு மிகப்பெரிய நிம்மதியை அவருக்கு அளித்திருக்கிறது. அந்த நிம்மதி தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை ஜெயலலிதா உறுதி செய்ய வேண்டும் என்பது மக்கள் நலன் கருதி எனது கோரிக்கையாகும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications