10 வருடம் மத்திய அரசில் இருந்தபோது ஏன் செய்யவில்லை? கருணாநிதிக்கு தமிழிசை கேள்வி
சென்னை: கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் திமுக பங்கு பெற்றிருந்த போது ஏன் காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து வலியுறுத்தவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக தலைவர் கருணாநிதிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தக்காளி விலையை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். விரைவில் விலை குறைந்துவிடும்.
நாட்டில் ஊழலற்ற ஆட்சியை வழங்குவதே பா.ஜ. அரசின் நோக்கம். காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தற்போது பேசும் திமுக தலைவர் கருணாநிதிக்கு, நானும் பல கேள்விகளை எழுப்ப முடியும்
கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் பங்கு பெற்றிருந்த போது திமுக ஏன் இப்பிரச்சனை குறித்து வலியுறுத்தவில்லை. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா, இரு தினங்கள் முன்பு, பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார். அதுகுறித்து கருத்து கூறிய கருணாநிதி, தொடர் அரசியல் அழுத்தங்கள் இருந்தால்தான் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.