காவிகள் இருக்கலாம்.. பாவிகள்தான் இருக்க கூடாது: ராகுல், ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி
கருணாநிதி வைரவிழாவில் மத்திய பாஜக அரசு மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
கோவை: நாட்டில் காவிகள்தான் இருக்கலாம்.. பாவிகள் இருக்கக் கூடாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் மற்றும் சட்டசபை வைரவிழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இப்பொதுக்கூட்டத்தில் மத்திய பாஜக அரசின் தொடர் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கோவையில் இன்று செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
கருணாநிதியின் வைரவிழா பொதுக்கூட்டத்தை பிரதமர் மோடியை விமர்சிக்கும் கூட்டமாக மாற்றிவிட்டனர். காவிகள் இருக்கக் கூடாது என்ற ராகுல் மற்றும் ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது.
நாட்டில் காவிகள் இருக்கலாம்; பாவிகள்தான் இருக்கக் கூடாது. எத்தனை சக்திகள் ஒன்றிணைந்து எதிர்த்தாலும் மத்திய அரசை எதுவுமே செய்ய முடியாது.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.