பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் எப்படிக் கூறலாம்.. கொந்தளிக்கும் தமிழிசை
சென்னை: தமிழக தேர்தல் ஆணையம் ஏதோ அரசியல் கட்சிக்கு அறிவுரை கூறுவது போல பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு எங்களுக்கு அறிவுரை கூறியிருப்பது உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது என்று பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கண்டித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் பொய்ப் புகார் கூறியுள்ளார், பொய்யான தகவலைக் கூறியுள்ளார். அவர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணைய செயலாளர் ஜோதி நிர்மலா கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதற்கு டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசியல் கட்சிக்கு அறிவுரை கூறுவது போல
மேல்மலையனூர் பிரபாகரன் காணவில்லை என்று எங்கள் கட்சியின் மண்டல தலைவர் குமார் கொடுத்து விட்டு, அந்த செய்தியை எங்கள் தலைமை அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி இருந்தார். குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் நாங்கள் எங்கள் கோரிக்கையை தேர்தல் ஆணையரிடம் வைத்தோம். ஆனால் தேர்தல் ஆணையர் ஏதோ அரசியல் கட்சிக்கு அறிவுரை கூறுவதுபோல பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியது கண்டிக்கத்தக்கது.
உள்நோக்கம் கொண்ட அறிக்கை
தேர்தலில் போட்டியிட முடிவு செய்த பின்பு ஒரு இடத்தில் குறிப்பிட்ட சம்பவத்தை சொல்லி காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் ஆதாரப்பூர்வமாக சொன்னபின்பும், தேர்தல் ஆணையர் நாங்கள் ஏதோ பொறுப்பற்ற தன்மையோடு நடந்து கொள்வது போல் கூறுவது உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது.
எங்களுக்கு அவசியம் இல்லை
அரசியல் தலைவர்களுக்கு திரித்து கூற வேண்டிய எந்த உள்நோக்கமும் இருக்க வாய்ப்பில்லை. அவசியமும் இல்லை. அதேபோல நேற்று புதுக்கோட்டை தேர்தல் அதிகாரி அங்கு என்ன நடந்தது என்னவென்றே எனக்கு தெரியாது என சொல்லியிருந்தார்.
ஜோதி நிர்மலா பேச்சு
பின்பு இன்று மாநில தேர்தல் செயலாளர் ஜோதி நிர்மலா, பத்திரிகைகளில் அங்கு இருந்து கிடைத்த தகவலின்படி, வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் நோக்கம் இல்லாமல் மறியல் செய்வதில் காட்டிய அக்கறையை மனு தாக்கல் செய்வதில் காட்டவில்லையே என்று மாவட்ட கலெக்டர் அறிக்கை கொடுத்திருக்கிறார் என்கிறார்.
நாங்கள் மட்டுமா குற்றம் சாட்டினோம்
தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற நோக்கத்துடன் வரும் வேட்பாளர்கள் எப்படி இப்படி நடந்து கொள்வார்கள். புதுக்கோட்டை சம்பவம் நாங்கள் மட்டுமே குற்றம் சாட்டவில்லை. கம்யூனிஸ்டு கட்சி, சுயேட்சை வேட்பாளர்களும் புகார் சொல்லி இருக்கிறார்கள்.
நடுநிலையோடு நடந்து கொள்ளுங்கள்
ஆக அதிகாரிகள் கொடுக்கும் பதில் தங்களை காப்பாற்றிக்கொள்ளவும், தவறு செய்பவர்களை ஊக்கப்படுத்துவதாகவும் உள்ளது. உண்மையான அக்கறையோடு புகார் கொடுக்கும் அரசியல் கட்சிகளை குறை சொல்வது உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார் தமிழிசை.