மாணவர்களுக்கு பைத்தியகாரத்தனமான நீட் விதிமுறைகள்... இன்னும் விடாமல் முட்டுக் கொடுக்கும் தமிழிசை
மாணவர்கள் மீது சிபிஎஸ்இ விதித்த விதிமுறைகளை தமிழிசை சௌந்தரராஜன் இன்னும் விடாமல் நியாயப்படுத்தி வருகிறார்.
Recommended Video
சென்னை: மாணவர்கள் மீது சிபிஎஸ்இ விதித்த கெடுபிடிகள் நியாயம்தான் என்று இன்னும் விடாமல் தமிழிசை முட்டுக் கொடுத்து வருகிறார்.
நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து 1.15 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
அவர்களில் 1.10 லட்சம் பேருக்கு தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதமுள்ள 5 ஆயிரம் பேருக்கு தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யாமல் ராஜஸ்தான், சிக்கிம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
மாரடைப்பால் மரணம்
இதையடுத்து தமிழக மாணவர்கள் வெளிமாநிலங்களில் தேர்வு எழுத முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் நின்று கொண்டும், கழிப்பறையிலும் பயணம் செய்த அவலம் நடந்தேறியது. மேலும் எர்ணாகுளத்தில் தேர்வு எழுத சென்ற போது தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் உயிரிழந்தார்.
சிபிஎஸ்இ அதிகாரிகள்
கிருஷ்ணசாமி எர்ணாகுளத்துக்கு வந்ததால் மன உளைச்சல் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடலூரிலும், மதுரையில் இரு மாணவிகளின் தந்தைகளும் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டனர். இது ஒரு புறமிருக்க மாணவர்களை தீவிரவாதிகளை போல் சிபிஎஸ்இ அதிகாரிகள் சோதனை செய்தது பெற்றோர் மனதை வாட்டி வதைத்தன.
|
நியாயத்துக்காகவே
இந்த சூழலிலும் நீட் தேர்வுக்கு விதித்த கெடுபிடிகளை நியாயப்படுத்துகிறார் தமிழிசை சௌந்தரராஜன். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ஏன் இத்தனை கெடுபிடிகள் என்கிறீர்களே? தொழில்நுட்பத்தை வைத்து யாரோ செய்யும்தவறுகளால் ஒருவருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தால் நியாயமாக தேர்வு எழுதிய குழந்தையின் வாய்ப்பு பறிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தானே?அத்தனை விதிமுறைகளும் அகிலஇந்தியா அளவில் ஏற்கனவே அறிவித்ததுதானே? என்று கேட்டுள்ளார்.
|
திறமையானவர்கள் ஜெயிக்க...
மற்றொரு டுவீட்டிலும் அவர் கூறுகையில் தேர்வு வருகை நேரம், உடை அணிகலன் கட்டுப்பாடு தடைசெய்யப்பட்ட பொருட்கள் பட்டியல் அனைத்தும் அறிவிக்கப்பட்டவையே. இந்தியா முழுமைக்கும் அதே கட்டுப்பாடுகள்தான். இவையெல்லாம் ஏன்? யாரும் குறுக்கு வழியில் தேர்வாகி விடக்கூடாது என்பதற்காகத்தான்? பாடுபட்டு படித்துவரும் திறமையானவர்கள் மட்டுமே ஜெயிக்க! என்று வியாக்யானம் பேசியுள்ளார் தமிழிசை.