முதல் வேலையாக மதுக் கடைகளை மூடுங்கள்.. ஜெ.வுக்கு தமிழிசை கோரிக்கை
சென்னை: முதல்வர் பதவியில் ஜெயலலிதா அமர்ந்ததும், முதல் வேலையாக மதுக் கடைகளை மூடும் உத்தரவில் கையெழுத்திட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
மீண்டும் ஜெயலலிதா முதல்வராகவுள்ளதைத் தொடர்ந்து அவருக்கு தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
தமிழக முதல்வராக மீண்டும் அதிமுக. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நாளை பதவி ஏற்பதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 7 மாதங்களாக முடங்கி கிடந்த நிர்வாகம் மீண்டும் ‘இயங்கும் நிர்வாகமாக' மாற்றப்படும் நிலை ஏற்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

புதிதாக பதவி ஏற்கும் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் நிர்வாக திறமை உடையவர்களாக இருக்க வேண்டும். பல வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுவும் வரவேற்கத்தக்கது. ஒவ்வொருவரின் விருப்பமும் ஊழல் இல்லாத வளர்ச்சி பெறும் மாநிலமாக தமிழகம் இருப்பதையே விரும்புகிறார்கள்.
தொடங்கப்படாத பல திட்டங்கள் தொடங்கப்படும் என்று கூறப்படுவதை நாளை பதவி ஏற்கும் அரசு உறுதி செய்ய வேண்டும். குஜராத்தில் செயல்படுவது போல் இணையதளம் மூலம் இ-டெண்டர் முறை அமுல்படுத்தினால் ஊழல் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்படும்.
தமிழகத்தில் சமூக அவலங்களுக்கும், கேடுகளுக்கும் காரணமாக இருப்பது டாஸ்மாக் கடைகள் தான். இதனால் பாதிக்கப்படுவது பெண்களும், குறிப்பாக இளைஞர்களும்தான். நேற்றுகூட குடிகார தந்தையை திருத்த முடியாத மகன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது வேதனையானது.
தமிழகத்தின் வளர்ச்சியின் மூலம் தொண்டர்கள் பிரார்தனை மூலமும் ஜெயலலிதாவுக்கு கிடைத்திருப்பது நிம்மதி. அதே நிம்மதி தமிழக மக்களுக்கும் கிடைக்க வேண்டும். மிகப்பெரிய சமூக அவலமாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடுவதை முதல் அறிவிப்பாக முதல்வர் வெளியிட வேண்டும். இது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை வளமடையச் செய்யும் என்று பாராட்டியுள்ளார் தமிழிசை.












Click it and Unblock the Notifications