முண்டேவின் மறைவையொட்டி தமிழக பாஜக 3 நாள் துக்கம்: பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மறைவையொட்டி தமிழக பாஜக சார்பில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அக்கட்சியின் தமிழக தலைவரும் மத்திய இணை அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கோபிநாத் முண்டே சாலை விபத்தில் மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து துயரம் அடைந்தேன்.
தனது கடின உழைப்பாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்.
மராட்டிய மாநில எதிர்க்கட்சித் தலைவர், மாநில துணை முதல்வர், மத்திய அமைச்சர் என பல்வேறு பணிகளில் திறம்பட பணியாற்றியவர்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அவரது அகால மரணம் பாஜகவுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினரின் பெரும் துயரில் தமிழக பாஜகவும் பங்கேற்கிறது.
அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும். பாஜக கொடிகள் 3 நாள்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். அனைத்துப் பகுதிகளிலும் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெறும்
இவ்வாறு அந்த அறிக்சையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.