திருப்பி அடித்த "மெர்சல்".. இதை சத்தியமாக பாஜக எதிர்பார்த்திருக்காது!
மெர்சலை வைத்து அரசியல் செய்த பாஜகவிற்கு அது சாதகமாக அமைந்ததா, பாதகமானதா என பார்க்கலாம்.
Recommended Video

சென்னை : மெர்சல் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக தமிழக பாஜக குரல் கொடுத்த நிலையில் இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதப் பொருளாகி இருக்கிறது. இது பாஜகவிற்கு சாதகமா பாதகமா என்பதை பார்க்கலாம்.
மெர்சல் படத்தில் விஜய் பேசிய வசனங்கள் மத்திய அரசின் ஜிஎஸ்டி கொள்கையை திரித்து கூறுவதாக இருப்பதாக முதல் குண்டை தூக்கி வீசினார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. அந்தக் கயிற்றை அப்படியே பிடித்து வந்து பாஜக தலைவர்கள் ஒரே அணியில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று குரலை உசத்தினர்.
தொடர் நெருக்கடியால் படத்தில் இருந்து வசனங்களை நீக்க தயாரிப்பாளர்கள் தரப்பு முடிவு செய்துள்ளது. ஆனால் பாஜகவின் இந்த நெருக்கடியை தமிழக அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் மட்டுமின்றி தேசிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது. திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரைத் தாண்டி "மெர்சல் vs மோடி" அரசியலுக்கு ராகுல் காந்தியும் ஆதரவாக டுவீட்டியுள்ளார்.

நடப்பது அது தானே
தமிழக பாஜக நீக்கச் சொன்ன அந்த வசனம் முழுக்க உண்மைக்கு மாறானது இல்லையே என்பது தான் அனைவரின் கருத்தும். ஏனெனில் சிங்கப்பூரில் 7 சதவீத வரி வாங்கப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் 28 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது ஆனால் ஏன் மிக தரமான கல்வி, மருத்துவத்தை இலவசமாகத் தர முடியவில்லை என்பது தான் வசனம்.

நாப்கினுக்கு 12% வரி போட்ட தேசம்
பெண்களின் அடிப்படைத் தேவையான நாப்கினுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி போட்ட இந்த நாடு, ஆணுறைக்கு வரி போடாமல் விட்டது மக்களை அதிர வைத்தது. இதைத்தான் விஜய் தனது படத்தில் வசனமாக பேசியிருந்தார்.

மருந்துக் பொருட்களுக்கும வரி
இதில் நிச்சயம் உண்மை இருக்கிறது ஏறத்தாழ பெரும்பாலான மருந்துப் பொருட்களுக்கு 5 முதல் 12 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததால் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதற்கு என்ன காரணம் என்றால் 2 ஆண்டுகளாக கட்டணம் செலுத்தவில்லை என்கிறார்கள் என்பது அடுத்த வசனம்.

அரசு மருத்துவமனைகளின் அவலம்
இதுவும் உண்மை சம்பவமே கோரக்பூரில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் 63 குழந்தைகள் அநியாயமாக உயிரிழந்ததை யாராலும் மறக்க முடியாது. மற்றொரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போது மின்வெட்டு ஏற்பட்டது என்று அடுக்கடுக்காக அரசு மருத்துவமனைகளின் அவலங்களைச் சொல்கிறார்.

அரசு மருத்துவமனையின் நிலை
மக்கள் நோயைக் காட்டிலும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவே பயப்படுகின்றனர் என்பது பல இடங்களில் உண்மை. இது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களுக்கு நன்றாகத் தெரியும் (சில நல்ல அரசு மருத்துவமனைகள் உண்டு, அது விதி விலக்கு). இந்நிலையில் தமிழக பாஜகவின் எதிர்ப்பால் இந்த அனைத்து குட்டும் தற்போது அம்பலமாகிவிட்டது.

சாதகமா, பாதகமா?
மெர்சல் படத்தில் இருக்கும் வசனங்களை நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி மோடியிடம் நல்ல பெயரை வாங்க நினைத்தவர்கள். தற்போது மக்கள், அரசியல்வாதிகள், திரைத்துறையினர் என அனைவரின் எதிர்ப்பையும் மோடிக்கு எதிராக சம்பாதித்துக் கொடுத்திருக்கின்றனர். இதில் இருந்தே இவர்களின் முயற்சி அவர்களுக்கு சாதகமாக அமைந்ததா அல்லது பாதகமாக போனதா என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.












Click it and Unblock the Notifications