ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா கண்ணீர் அஞ்சலி
ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் தமிழக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை மாலை கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 5ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா மறைந்தார். அவரது உடல் மெரீனா கடற்கரை எம்ஜிஆர் நினைவிடத்தின் அருகில் 6ம் தேதி மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் சென்னை வந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று மாலை ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்த முதலமைச்சர் பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி குடும்பத்தினரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின்னர் முதலமைச்சர் பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மறைந்த ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.