மக்கள் விரும்பும்படி ஆட்சி தொடரும்... சிவகங்கையில் முதல்வர் பழனிசாமி பேச்சு!
அதிமுக தொண்டர்களின் விருப்பம், எண்ணங்களின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை : அதிமுகவின் தொண்டர்கள், மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரசு செயல்படும் என்று முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.
சிவகங்கையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற போது அவர் பேசியதாவது : மக்களின் விருப்பம், எண்ணத்திற்கு ஏற்ப அரசு தொடர்ந்து செயல்படும். அதிமுகவைச் சேர்ந்த 90 சதவீதம் பேர் விவசாயிகள் தான், ஏன் நான் கூட ஒரு விவசாயி தான். எனவே விவசாயிகள் நலனில் எப்போதுமே அதிமுக அரசு அக்கறையுடன் இருக்கும்.
இந்தியாவிலேயே தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது, திமுக ஆட்சிக்கு வராமல் போனதற்கு சட்டம், ஒழுங்கு பிரச்னையே முக்கிய காரணம். ஆனால் எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே சட்டம், ஒழுங்கு சரியில்லாதது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த நினைக்கின்றனர் என்றார்.
இதனைத் தொடர்ந்து திருப்பத்தூரில் புதிய பேருந்து நிலையம், சிவகங்கையில் 10 கிமீ தூரத்திற்கு புறவழிச்சாலைகள், சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு புதிய கருவிகள் உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.
முன்னதாக 15,697 பயனாளிகளுக்கு ரூ. 39.07 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். ரூ. 34.67 கோடி மதிப்பில் முடிவுற்ற 127 பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்ததோடு ரூ. 44.58 கோடி மதிப்பில் 88 புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்லும் நாட்டினார்.