தமிழகத்தில் ஓர் மழைக்காலம்... விடிய விடிய பரவலாக மழை!
சென்னை: தமிழகம் முழுவதும் விடிய விடிய பரவலாக மழை பெய்த நிலையில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்வதால் இதமான சூழல் நிலவுகிறது.
தெற்கு ஆந்திர கடற்பகுதி முதல் குமரிக் கடல் பகுதி வரை வளிமண்டல கீழ் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. மேற்கு மாவட்டத்திலும் கனமழை பெய்த நிலையில், காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் கூறிய நிலையில், தமிழகத்தில் பரலான மழை பெய்துள்ளது. இன்று காலையிலும் சாரல் மழை பெய்வதால் இதமான சூழல் நிலவுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் மழை
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது, அதிகட்பசமாக ஓலம்பாளையத்தில் 106 மில்லிமீட்டர் மழையும், கோபியில் 26 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.

மின்சாரம் துண்டிப்பு
சேலம் மாவட்டம் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், கருமந்துறை, பேளூர், உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. மேட்டூரில் திடீரென இடிமின்னலுடன் கன மழை, குளிர்ந்த சூழல் உருவாகி உள்ளது, மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.

வேலூரிலும் சாரல் மழை
இதே போன்று இராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரமாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் விடியற்காலை முதல் சாரல் மழை பெய்துள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி
வேலூர் மாவட்டம் அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. வாணியம்பாடி, ஆலங்காயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விடியற்காலை முதல் மழை பெய்து வருகிறது இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையிலும் சாரல் மழை
சென்னையில் நேற்று முதல் சாரல் மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் நகரின் சில பகுதிகளில் இன்று காலையில் சாரல் மழை பெய்தது.












Click it and Unblock the Notifications