தமிழகத்தை உலுக்கிய பல திருப்பங்களுக்கு 13 மாத கால சாட்சியாக இருந்த வித்யாசாகர் ராவ்!
தமிழகத்துக்கு 13 மாதங்கள் கழித்து முழு நேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்துக்கு கடந்த ஓராண்டாக்கும் மேலாக ஆளுநர் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது பன்வாரி லால் புரோஹித் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்துக்கு ஒருவழியாக முழுநேர ஆளுநர் நியமிக்கப்பட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்துக்கு முழுநேர ஆளுநராக மேகாலாயாவில் ஆளுநராக பதவி வகித்த பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 13 மாதங்களாக பொறுப்பு ஆளுநராக பதவி வகித்து வந்தார் வித்யாசாகர் ராவ்.
தமிழகம் பல இக்கட்டான அரசியல் சூழ்நிலைகளை சந்தித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் தமிழகத்துக்கென்று முழுநேர ஆளுநர் இல்லாமல் மஹாராஷ்ட்ராவின் ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவி வகித்தார்.

மருத்துவமனையில் ஜெயலலிதா
அந்த சூழ்நிலையில் தான் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றிலிருந்து தமிழக அரசியல் களம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்திக்கொண்டிருந்த போது முழுநேர ஆளுநர் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

பன்னீர் செல்வத்திற்கு பதவி பிரமாணம்
ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்த போது தமிழகத்தில் முழு நேர ஆளுநர் இல்லை. இருப்பினும் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஜெயலலிதா மரணம் அடைந்த அன்று இரவே ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வரான போது பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவி பிரமாணம்
அதன் பிறகு ஓபிஎஸ் கட்சியிலிருந்து விலகிய போது, கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் பல நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமிக்கபப்ட்ட போதும் அவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

13 மாதங்களுக்கு பிறகு ஆளுநர்
பிறகு, அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி, அதிமுக அம்மா அணி இணைந்த போது துணை முதல்வராக ஓபிஎஸுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தில் இக்கட்டான பல பிரச்சனைகள் நடக்கும் போது மும்பையில் இருந்தார். அதனால் அவரால் தமிழக பிரச்சனைகளை சரிவர கவனிக்க முடியவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில் 13 மாதங்கள் கழித்து தமிழகத்துக்கு முழு நேர ஆளுநர் கிடைத்துள்ளார்.

ரோசய்யாவுக்கு பிறகு
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 30ஆம் தேதி, முன்னாள் ரோசய்யா 5 ஆண்டுகள் ஆளுநராக இருந்து பதவி காலத்தை நிறைவு செய்தார். அதனையடுத்து அப்போதைய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகஸ்டு 31ஆம் தேதி, வித்யாசாகர் ராவை பொறுப்பு ஆளுநராக நியமித்தார். அதிலிருந்து 13 மாதங்கள் அவர் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் போன்ற பெரிய மாநிலத்துக்கு 13 மாதங்கள் என நீண்ட காலம் ஆளுநர் நியமிக்கப்படாமல் இருந்தது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications