பரமா படிடா.. அரசு பள்ளி மாணவர்களுக்காக அதிரடி உத்தரவு போட்ட தமிழ்நாடு அரசு.. சூப்பர் வாய்ப்பு
சென்னை: அரசுப் பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் பள்ளிக்கு வருகைபுரியாத மாணவர்கள், பள்ளிக்கல்வியைப் பாதியில் கைவிடும் மாணவர்களை இனம்கண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளையும், சிறப்புப் பயிற்சிகளையும் வழங்கி, அவர்களை படிப்பைத் தொடர செய்வது அவசியம் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில வைக்க பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் படிப்பை இடையில் நிறுத்திய மாணவர்களை கண்டுபிடித்து சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

மேலும் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு ஜுன் மாதம் முழுவதும் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். இதன் மூலம் அவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்று மேல்வகுப்புக்கு செல்ல ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு விரும்புகிறது.
தமிழ்நாடு மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் 6 முதல் 18 வயதுடைய, பள்ளி செல்லாத மற்றும் இடைநின்றக் குழந்தைகள் (மாற்றுத் திறனாளி குழந்தைகள் உட்பட) மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் பள்ளிக்கு வருகைபுரியாத மாணவர்கள், பள்ளிக்கல்வியைப் பாதியில் கைவிடும் மாணவர்களை இனம்கண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளையும், சிறப்புப் பயிற்சிகளையும் வழங்கி, அவர்களை படிப்பைத் தொடர செய்வது அவசியம்.
இதைக்கருத்தில்கொண்டு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 'தொடர்ந்து கற்போம்' என்ற முன்னோடித் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2023-2024-ம் கல்வி ஆண்டில், அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், பள்ளிஅளவில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு, அந்தந்த உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு, ஜுன் 1 முதல் 30 வரை 30 நாட்களுக்கு, திங்கள் முதல் சனி வரைகாலை 9 முதல் மாலை 5 மணி வரை சிறப்பு பயிற்சிவகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில், குறைந்தபட்சக் கையேடுகளைப் பயன்படுத்தி, வாராந்திர தேர்வுகளைநடத்த வேண்டும். சனிக்கிழமைதோறும் ஊக்கமூட்டுதல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி அளிக்க வேண்டும். எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் தேர்வுக்கு வருகைபுரியாத மாணவர்கள் அனைவரையும், துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்" இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications