கருணாநிதியின் திறமைக்கு கொஞ்சம் கூட ஈடுகொடுக்க முடியாதவர் ஸ்டாலின் - தமிழிசை விளாசல் -Exclusive
தமிழக அரசில் ஊழல் அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சரியில்லை.அதேவேளையில் எதிர்க்கட்சியான திமுகவும் சரியாக செயல்படவில்லை என தமிழக பாகஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக அரசு சட்டத்தின் முன் குற்றவாளியாகத்தான் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை. எதிர்க்கட்சியான திமுக செயல்படாமல் உள்ளது என ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தமிழக பாகஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
சட்டம் ஒழுங்கு சரியில்லை. சட்டத்தின் முன் நிற்கின்ற அரசாகத்தான் தமிழக அரசு உள்ளது. தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
விளக்கம் தேவை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் பதவி கொடுக்கப்பட்ட பெண் அதிகாரியிடமே லஞ்சம் கேட்டுள்ளார் ஒரு பெண் அமைச்சர். ஆனால் அந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சரோ, சம்பந்தப்பட்ட அமைச்சரோ எந்த பதிலையும் அளிக்கவில்லை. அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.
ஊழல் குற்றச்சாட்டுகள்
பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் வருமானவரித்துறைக்கு அமைச்சர்கள் குறித்து புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். அதேபோல் வருமான வரித்துறையினர் முதல்வருக்கு ஊழல் அமைச்சர்கள் குறித்து எழுதியுள்ளார்கள். இப்படி மேலும் கீழும் ஊழல் குற்றச்சாட்கள் பறந்து வருகின்றன.
மர்ம மரணங்கள்
இந்த அரசு ஒரு குற்றவாளியாக சட்டத்தின் முன் நிற்கின்ற அரசாகவே உள்ளது. மேலும் தமிழகத்தில் மர்ம மரணங்கள் மிக சாதரணமாக நடந்து வருகிறது. அதுவும் கொடநாட்டில் நடக்கும் கொலைகள் அச்சுறுத்துபவையாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சரியில்லை. வறட்சியினால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒன்றும் செய்யலையே...
மத்திய அரசு அரசு 500 கோடி ரூபாய் கொடுத்தும் மாநில அரசு வறட்சியை போக்க ஒன்றும் செய்யவில்லை. அதேபோல் கால்வாய்களை தூர்வாரி நீர்நிலைகளை பாதுகாக்கவில்லை. நிலத்தடி நீரை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிலத்தடி நீர் 85 சதவிகிதம் பாழடைந்து உள்ளது.
திமுக படுமோசம்
தமிழகத்தில் ஆளும் கட்சிதான் இப்படி இருக்கிறது என்றால் எதிர்க்கட்சியான திமுக அதைவிட மோசமாக உள்ளது. கருணாநிதியின் திறமைக்கு கொஞ்சம் கூட ஈடுகொடுக்க முடியாதவராக ஸ்டாலின் உள்ளார்.
காங்கிரஸ் மட்டும் என்னவாம்
திமுக கொண்டாடும் கருணாநிதியின் வைர விழாவுக்கு அவர்கள் எங்களை அழைக்கவில்லை என்று வருத்தம் இல்லை. அவருடைய அழைப்புக்காக நாங்கள் ஏங்கவில்லை. ஆனால் பாஜகவை, திமுகவை அழிக்கும் எண்ணம் கொண்ட கட்சி என்கிறார். திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் மட்டும் திமுக வளர வேண்டும் என நினைக்கிறதா?
அக்கறையில்லாத ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின் தமிழக மக்கள் பிரச்சனைகளை குறித்து அக்கறைகொள்ளாமல் தன் அரசியல் முகவரியை எழுதுவதில் குறியாக இருக்கிறார். அரசியல் நாகரீகம் இல்லாமல் ஒரு குறுகிய வட்டத்துக்குள் கட்சியை எடுத்துச் செல்கிறார் ஸ்டாலின். கருணாநிதிக்கு இருந்த பரந்துபட்ட மனநிலை ஸ்டாலினுக்கு இல்லை.
வாய்ப்பு தாருங்கள்...
உள்ளாட்சியில் பாஜகவுக்கு ஒரு வாய்ப்பை தந்தால் 50 ஆண்டுகள் திராவிடக் கட்சிகள் தராத நல்ல ஆட்சியை, சரியான முறையில் பாஜக தரும். மத்திய அரசு தமிழகத்துக்கு பல திட்டங்களை செய்துகொடுத்துக்கொண்டு இருக்கிறது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு 1500 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
அம்மா தடுப்பு ஊசி
ஆறு, குளங்களை தூர்வாருவதற்கு 500 கோடிகள் ஒதுக்கியுள்ளது. மேலும் கூவம் நதியை சுத்தம் செய்ய 400 கோடி ரூபாயை ஒதுக்கினார்கள். ஆனால் அந்த வேலையை இன்னும் தொடங்கவேயில்லை. 'இந்திர தனுஷ்' என்று குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போடும் மத்திய அரசின் திட்டத்தை அம்மா தடுப்பூசி என மாநில அரசு பிரபலப்படுத்திக்கொண்டுள்ளது. மாநிலத்தில் வேறு கட்சி ஆட்சி செய்யும்போது மத்திய அரசின் நல்ல திட்டங்களை வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்கிறார்கள். அதனால் மத்திய அரசு தமிழகத்துக்கு ஒன்றும் செய்யவில்லை என நினைக்கிறார்கள். இன்று மாநிலத்தில் அதிமுக அரசு சில விஷயங்களையாவது செய்துகொண்டிருக்கிறது என்றால் அதற்கு மத்திய அரசு கொடுக்கும் ஊக்கமும் ஆக்கமும் தான் காரணம்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.