பாதாளம் வரை பாயும்... அமைச்சர் கருத்தை ஆளுநர் கவனிப்பார்- திமுக எம்எல்ஏ
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 'பாதாளம் வரை பாயும்' என்று அளித்துள்ள பேட்டியை தமிழக ஆளுநர் கவனத்தில் எடுத்துக்கொள்வார் என்று திமுகவின் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
சென்னை: வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் 'பாதாளம் வரை பாயும்' என்ற பேட்டியை தமிழக ஆளுநர் கவனத்தில் எடுத்துக் கொள்வார் என்று தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இ. பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை!
"பாதாளம் வரை பாயும் என்று சொல்கிறார்களே? இதுக்கு மேலும் தெரியவில்லையா உங்களுக்கு?" என்று அதிமுக அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான திண்டுக்கல் சீனிவாசன் அளித்துள்ள பேட்டி அதிர்ச்சியளிக்கிறது.
"பணம் பாதாளம் வரை பாயும்" என்பதுதான் பழமொழி. அதிமுகவிற்குள் நடக்கும் குழப்பத்திற்குள் மீன் பிடிக்க இப்போது பணம் மட்டுமே போதும் என்ற முடிவிற்கு இந்த "குதிரை பேர" அரசின் அமைச்சர்கள் முடிவு செய்திருப்பதுதான் இந்த பேட்டியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 18.2.2017 அன்று சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வெற்றி பெற நடத்திய "குதிரை பேரம்" இன்னும் சிரிப்பாய் சிரிக்கிறது. 'கோடிகளில் பேரம்' குறித்து அதிமுக சட்டசபை உறுப்பினர்களே டைம்ஸ்நவ் ஆங்கில தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்து, நாடுமுழுவதும் தமிழகத்தின் மானம் கப்பலேறியது.
பேரத்துக்கு கடும் கண்டனம்
அந்த பேரப்புகார் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து தமிழக ஆளுநரிடம் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள புகார் மனு நிலுவையில் உள்ள போதே ஒரு மூத்த அமைச்சர் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் இன்னொரு முறை 'குதிரை பேரம் நடத்துவோம்' என்று அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
விசாரணையில் உள்ள வழக்கு
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட அந்த மனுவினை 19.6.2017 அன்று சட்டப் பேரவை தலைவருக்கும், மாநில தலைமை செயலாளருக்கும் அனுப்பி ஆளுநர் அது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார். நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற்றது தொடர்பாக திமுக சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
மெஜாரிட்டியை நிரூபிக்க பணம்
அதிமுகவில் உதயமாகியுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி 'நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற்றது செல்லாது' என்று போட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெற்றதும், குதிரை பேரம் நடத்தியதும் ஆளுநர் விசாரணையில் ஒரு புறமும், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற விசாரணையில் இன்னொரு புறமும் இருக்கின்ற நேரத்தில் ஒரு அமைச்சரே ஆட்சிக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க பணம் கொடுப்போம் என்ற ரீதியில் பேட்டியளித்திருப்பது சட்டமன்ற ஜனநாயகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
குதிரை பேர அரசு
ஆட்சியை தக்க வைக்க எப்படிப்பட்ட அவமானகரமான செயலையும் செய்வதற்கு இன்னொரு முறை இந்த குதிரை பேர அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. பதவியில் நீடிக்க மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை கோடி கோடியாக கொடுக்கும் கொஞ்சம் கூட கூச்சமில்லாத, வெட்கமில்லாத ஆட்சி தமிழகத்தில் நடப்பது உள்ளபடியே வேதனையளிக்கிறது.
பாதாளம் வரை பாயும்
"பாதாளம் வரை பாயும்" என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா என்று பத்திரிக்கையாளர்களையே பார்த்து கேள்வி எழுப்பும் அளவிற்கு ஊழல் அமைச்சர்கள் குவித்து வைத்துள்ள பணம் அவர்களது கண்களை மறைப்பது மட்டுமல்ல- அந்த அளவிற்கு ஆணவத்தை கொடுத்துள்ளது.
முதல்வர் வாய்திறக்காதது ஏன்?
பணம் கொடுத்து வெற்றி பெறுவோம் என்று அதிகார வெறி பிடித்த அமைச்சர் ஒருவரே பேட்டியளித்தும் இதுவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து வாய் திறக்கமால் இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. "குதிரை பேர" ஆட்சி என்று இந்த ஆட்சியை எங்கள் தளபதி விமர்சிக்கும் போது கோபப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரது அமைச்சரவை சகாவே குதிரை பேரத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்று பேசியது பற்றி இதுவரை கண்டிக்காமல் இருப்பது ஏன்? முதலமைச்சர் மட்டத்தில் இப்படி குதிரை பேரம் நடத்துவது பற்றி அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்.
Recommended Video
ஆளுநர் கவனத்தில் எடுத்துக்கொள்வார்
இந்த கேள்விகளுக்கு எல்லாம் இப்போது பதில் சொல்லவில்லையென்றாலும், இந்த அரசை மெஜாரிட்டியை நிரூபிக்க கட்டளையிடும் சூழ்நிலை வரும் போது மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் "பாதாளம் வரை பாயும்" பேட்டியை நிச்சயம் கவனத்தில் எடுத்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மக்கள் கொந்தளிப்பு
சட்டமன்றத்தின் மாண்பும் சட்டமன்றத்தில் எடுக்கப்படும் வாக்கெடுப்பின் புனிதத் தன்மையும் குதிரை பேர அதிமுக ஆட்சியில் இப்படி தான் சீரழிக்கப்பட்டு வருகிறது என்பதை கண்டு மக்கள் மிகுந்த வேதனை அடைந்து இப்படி ஒரு ஆட்சி நடக்கிறதே என்று கொந்தளித்து போய் இருக்கிறார்கள்.