மழை நிவாரணப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது.. சொல்கிறார் பொன். ராதா
நாகர்கோவில்: மழை நிவாரணப் பணிகளில் தமிழக அரசின் செயல்பாடு மிகுந்த பாராட்டுக்குரியது. தமிழக அரசு மத்திய அரசின் உதவியை நாடினால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்றத் தவறி இருந்தாலும் அங்கு அதிக வாக்குகளை பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி மட்டும் 95 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகளின் வாக்குகளை சேர்த்தால் ஒரு கோடியே 30 லட்சம் வாக்குகளை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பீகாரில் காங்கிரஸ், ராஷ்டரிய ஜனதாதளம், நிதிஷ்குமார் கட்சிகள் ஆகியவை ஒன்று சேர்ந்து பெற்ற வாக்குகள் மூலம் ஆட்சியை பிடித்துள்ளது.கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா, நிதிஷ்குமார் கூட்டணி 200 இடங்களை கைப்பற்றியது. ஆனால் தற்போது உள்ள மெகா கூட்டணி 178 இடங்களையே கைப்பற்றி இருக்கிறது. நிதிஷ்குமார் கட்சி ஏற்கனவே கைப்பற்றி இருந்த இடங்களை விட பாதி இடங்களையே கைப்பற்றி உள்ளது. இது அக்கட்சியின் தோல்வியையே காட்டுகிறது.
எனவே, பீகார் தேர்தல் முடிவு அம்மாநிலத்துக்கு உட்பட்டதே தவிர அகில இந்திய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. 2016-ம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும்.
குளச்சலில் துறைமுகம் அமைய வேண்டும் என்பது நமது 60 ஆண்டுகால கனவாகும். குளச்சல் துறைமுக பிரச்சனை தொடர்பாக மீனவர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது வருந்தத்தக்கது.
மழை நிவாரணப் பணிகளில் தமிழக அரசின் செயல்பாடு மிகுந்த பாராட்டுக்குரியது. தமிழக அரசு மத்திய அரசின் உதவியை நாடினால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications