டெங்கு கொசுவை கட்டுப்படுத்த ரூ. 16 கோடி நிதி ஒதுக்கீடு... அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!
தமிழகத்தில் கொசுவை கட்டுப்படுத்த ரூ. 16 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை : கொசுக்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு ரூ. 16 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் டெங்கு ஒழிப்பு மற்றும் வாகனங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை தவக்கி வைத்த பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: சென்னை முழுவதும்
35 வாகனங்களில், மருத்துவர்கள் மற்றும் உதிவியாளர்களுடன் நேரில் சென்று பல்வேறு பகுதி மக்களுக்கும் நிலவேம்பு கசாயம் விநியோகிக்கப்படுகிறது. இந்த வாகனத்தின் மூலம் சென்னையில் நாள் ஒன்றிற்கு 50 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்படும்.
2000 கிலோ நிலவேம்பு கஷாயம் நாள் ஒன்றுக்கு தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும். ஆண்டுக்கு 10,000 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்து வருகின்றனர். ரூ. 16 கோடி மதிப்பீட்டில் கொசுவை கட்டுபடுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குப்பைக்கும் இந்த கொசுவுக்கும் சம்பந்தம் இல்லை. மேலும் டெங்குவை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளை தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி எடுத்து வருகிறோம்.
அடுக்கு மாடி குடியிருப்பில் 10 மாடி உயரம் வரை புகை செல்லக்கூடிய புதிய கொசு கட்டுப்பாட்டு புகை கருவி வாங்கப்பட்டுள்ளது. ஒருநாள் காய்ச்சல் தான் என்று பொதுமக்கள் சாதாரணமாக இருந்திட வேண்டாம். காய்ச்சல் வந்த உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் ரத்த தட்டணுக்களை 1 நிமிடத்திற்கும் குறைவான நேரத்திலேயே கண்டறியும் கருவிகள் உள்ளன, என்று அவர் கூறியுள்ளார்.