தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க தலைவர் நல்லதம்பி அதிமுகவில் இருந்து நீக்கம்: ஜெ. உத்தரவு
சென்னை: தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேள தலைவரும், நாமக்கல் மாவட்ட ஜெ. பேரவை துணை தலைவருமான கே.நல்லதம்பி அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். திமுக பொருளாளர் ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே பிரச்சார நிகழ்ச்சியில் நல்லதம்பி பங்கேற்றதே, நீக்கத்திற்கு காரணம் என்று தெரிகிறது.
அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை:
அதிமுகவின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அதிமுகவின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையிலும், அவப்பெயர் உண்டாகும் விதத்திலும் செயல்பட்ட காரணத்தினால் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கே.நல்லதம்பி (மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை தலைவர்) இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது. இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
நீக்கப்பட்ட நல்லதம்பி, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன மாநில தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து நல்ல தம்பி கூறுகையில், நீக்கப்பட்டதற்கு, என்ன காரணம் என்று தெரியவில்லை. நானும் ஊடகங்களை பார்த்துதான் தகவலை தெரிந்து கொண்டேன், என்றார்.
கடந்த 1ம்தேதி நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் நல்லதம்பி தலைமையில் இயங்கும் சங்கத்தினர் பங்கேற்றனர். தமிழக அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இந்த அமைப்பினர் பங்கேற்கவில்லை.
மேலும், கடந்த 13ம்தேதி, நாமக்கல் மாவட்டத்தில் திமுக பொருளாளர் ஸ்டாலின் நடத்திய, 'நமக்கு நாமே விடியல் மீட்பு' பிரசார பயணத்தின்போது, நாமக்கல் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர்களுடன் மு.க ஸ்டாலின் கலந்துரையாடினார். இதில், நல்லதம்பியும் கலந்து கொண்டு தற்போதைய லாரி தொழில் நிலை குறித்து தெரிவித்தார். இவையெல்லாம்தான், ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.