காலாண்டு தேர்வில் ஒரு முதல்வர், முழு ஆண்டு தேர்வில் 3வது முதல்வர்.. அவல நிலையில் தமிழக மாணவர்கள்!
சசிகலா முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும்பட்சத்தில், இரண்டே மாதங்களில் மூன்று முதல்வர்களை இந்த தமிழகம் பார்க்க வேண்டிய சூழல் எழும்.
சென்னை: இரண்டே மாதங்களில் தமிழகம் 3வது முதல்வரை பார்க்கப்போகிறது. இது முன் எப்போதும் இல்லாத ஒரு இக்கட்டான சூழ்நிலை.
காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த ஆண்டு, செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விளக்கமான அறிக்கை கேட்டும், பொறுப்பு முதல்வர் நியமிக்க கோரியும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

பன்னீர்செல்வத்திடம் பொறுப்புகள்
அக்டோபர் 11ம் தேதி முதல்வர் ஜெயலலிதா வசமிருந்த பொறுப்புகள் அனைத்தும் நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டது. இலாகா இல்லாத முதல்வரானார் ஜெயலலிதா.

முதல்வரானார் பன்னீர் செல்வம்
இந்நிலையில், கடந்த டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அன்று நள்ளிரவு அதாவது, டிசம்பர் 6ம் தேதி அதிகாலையில், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். இப்போதுவரை பன்னீர்செல்வம் முதல்வராக தொடருகிறார்.

சசிகலாவுக்கு அடுத்த வாய்ப்பு
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட சசிகலாவை, பன்னீர்செல்வத்திற்கு பதிலாக முதல்வராக்க வேண்டும் என்று கட்சியின் முன்னணி நிர்வாகிகள், அமைச்சர்களில் சிலரே கோரிக்கைவிடுக்க தொடங்கியுள்ளனர். சசிகலாவுக்கு பதவியை விட்டுத்தர பன்னீர்செல்வமும் தயாராகவே இருப்பதாக கூறப்படுகிறது.

ஜனவரியிலேயே பதவியேற்பு?
ஜனவரி 14ம் தேதிக்கு முன்பாகவே சசிகலா முதல்வராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் கசிகிறது. இந்த நிலையில், சசிகலா முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும்பட்சத்தில், இரண்டே மாதங்களில் மூன்று முதல்வர்களை இந்த தமிழகம் பார்க்க வேண்டிய சூழல் எழும்.

மூன்றாவது முதல்வர்
ஏனெனில் ஜெயலலிதா மரணமடையும்வரை அவர் முதல்வர் பதவியில்தான் இருந்தார். ஏற்கனவே முதல்வருக்கான துறைகளை தன்வசம் வைத்திருந்தாலும், டிசம்பர் 6ம் தேதி முதல்தான் பன்னீர் செல்வம் அதிகாரப்பூர்வ முதல்வர். ஜனவரி 14க்கு முன்பாக சசிகலா முதல்வராக பதவியேற்றால், இரு மாத இடைவெளியில் தமிழகம் மூன்றாவதாக ஒரு முதல்வரை பார்க்க வேண்டிய நிலை ஏற்படும்.

மாணவர்கள் நிலை பரிதாபம்
சமூக வலைத்தளத்தில் ஒரு நெட்டிசன் இந்த நிலை பற்றி இப்படி குறிப்பிட்டிருந்தார். "காலாண்டு தேர்வு கேள்வி-பதிலில், முதல்வர் ஜெயலலிதா, அரையாண்டு தேர்வின்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முழு ஆண்டு தேர்வின்போது, சசிகலா என்று பதில் எழுத வேண்டிய நிலையில் தமிழக பள்ளி மாணவர்கள் உள்ளனர்". எவ்வளவு மோசமான நிலை இது?












Click it and Unblock the Notifications