நிலையான முதலமைச்சர் வேண்டும்... கருணாஸின் ஆவேசப் பேச்சுக்குக் காரணம் என்ன? - வீடியோ
சென்னை: நிலையான முதலமைச்சர் வேண்டும். அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால்தான் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடையும் என இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் ஆவேசமாக கூறியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், முக்குலத்தோர் புலிப்படை சார்பாக, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் திருவாடனைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் நடிகர் கருணாஸ்.
அதிமுக இரண்டாகப்பிளவுபட்டு, அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் தனியார் விடுதியில் அடைக்கப்பட்டிருந்தபோது கருணாஸ் பெயர் சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ்,'' ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று என்னால் பொறுப்பற்றவனாக இருக்க முடியாது. தமிழகத்துக்கு நிலையான முதலமைச்சர் வேண்டும்.
ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமானால் இரண்டு அணிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நான்கு ஆண்டுகள் ஆட்சியை திறம்பட நடத்திட வேண்டும்'' என ஆவேசமாகப் பேசினார்.
இரண்டு அணிகளும் இதோ இணையப்போகிறோம் , அதோ இணையப் போகிறோம் என போக்குக் காட்டிக்கொண்டிருந்ததால் அதிமுகவின் தொண்டர்கள் அயர்ச்சியடைந்துவிட்டனர். இந்நிலையில் கருணாஸ், 'நிலையான முதலமைச்சர் வேண்டும்' என்று கூறியிருப்பது ஏன்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.