ராமேஸ்வரம் வந்த கர்நாடகா பக்தர்களுக்கு பூரண கும்ப மரியாதை
ராமேஸ்வரம்: காவிரி விவகாரம் தொடர்பாக ஆங்காங்கே வன்முறைகள் வெடித்து வரும் நிலையில், கர்நாடக பக்தர்களுக்கு தமிழகத்தில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழர்களையும் தமிழக வாகனங்களையும் தாக்கி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழக வாகனங்கள் பல இடங்களில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, இரு மாநிலங்களிலும் நிலவும் வன்முறை மற்றும் அசாதாரண சூழலை மாற்றி அமைதி ஏற்படுத்தும் வகையில் ராமேஸ்வரம் வந்த கர்நாடக பக்தர்களை பூரணகும்ப மரியாதை கொடுத்து ராமேஸ்வரம் இந்து மக்கள் கட்சியினர் கோவிலுக்கு அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்துவைத்து பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.