தமிழகத்தில் நகராட்சிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு.. பொது பிரிவில் பெண்களுக்கு 51 நகராட்சிகள்
சென்னை: தமிழகத்தில் நகராட்சிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல் இன்று தமிழக அரசு வெளியிட்டது. பொதுப் பிரிவில் பெண்களுக்கு 51 நகராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களுக்கு மேற்கண்ட தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு நேரடியாக தேர்தல் நடக்கிறது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில பேரூராட்சி, மாநகராட்சி மேயர் பதவிக்கான இடஒதுக்கீட்டுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த நிலையில் தற்போது நகராட்சிகளுக்கான இட ஒதுக்கீட்டை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி கூடலூர் நகராட்சி பழங்குடியின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 121 நகராட்சிகள் தமிழகத்தில் உள்ளன. இவற்றில் 51 நகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
ராணிப்பேட்டை, சீர்காழி,திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட 9 நகராட்சிகள் பட்டியல் இன பெண்களுக்கும் நெல்லிக்குப்பம், அரக்கோணம், மறைமலைநகர் உள்ளிட்ட 8 நகராட்சிகள் பட்டியல் இனத்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.