பூரண மதுவிலக்கில் தமிழகம் முன் மாதிரியாக இருக்க வேண்டும்... விஜயகாந்த் பேச்சு
சென்னை : பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில் தமிழகம் முன் உதாரணமாக திகழ வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி விஜயகாந்த் தலைமையில் சென்னை சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (வியாழன்) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

உண்ணாவிரதத்தில் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோ, இளைஞரணித் தலைவர் எல்.கே.சுதீஷ், தே.மு.தி.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
விஜயகாந்த் மற்றும் கட்சியினர் மாலை ஐந்து மணிக்கு பழச்சாறு குடித்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.
போராட்டமுடிவில் விஜயகாந்த் பேசும்போது கூறியதாவது:-
மதுக்கடைகளை மூடுவதில் தமிழகம் முன்னுதாரணமாக திகழ வேண்டும். ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மதுக்கடைகளை மூடவில்லை என்று கூறக்கூடாது. குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை. நல்லவர்களுக்கு, நல்ல கட்சிகளுக்கு ஓட்டுப்போடுங்கள் என்றுதான் நான் கூறுகிறேன்'' என்று கூறினார்.
உண்ணாவிரதத்தின் முடிவில் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது..
அப்துல்கலாம் இறுதி சடங்கில் மற்றவர்களை போல் போலியாக நடிக்க முடியாமல் கண்ணீர் உருகியவர் விஜயகாந்த். அவரின் புகழை யாரும் சீர்குலைக்க முடியாது. தமிழக மக்களுக்கு அவரின் உண்மை நிலைமை தெரியும். மக்கள் முன் நடிக்க தெரியாத தலைவர். இயல்பாக மக்களிடம் பேசக்கூடிய தலைவராக விஜயகாந்த் இருக்கிறார். இன்றைக்கு தமிழக அரசின் கவுண்டவுன் தொடங்கி விட்டது. இந்த ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட தயாராகி விட்டார்கள்.
தேர்தலை கணக்கில் கொள்வது ஆளுங்கட்சி. ஆனால் அடுத்த தலைமுறை பற்றி சிந்திப்பது தே.மு.தி.க. மட்டும் தான். சசி பெருமாள் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டும், மேலும் அவரது மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இது குறித்த வெள்ளையறிக்கையும் வெளியிட வேண்டும்.
கைது செய்யப்பட்டுள்ள மாணவ-மாணவிகளை விடுவிக்காவிட்டால் பொது மக்களையும், மாணவர்களையும் திரட்டி புழல் சிறை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பிரதமரை நீங்கள் நேரில் போய் பார்க்கிறீர்கள். ஆனால் நெசவாளர்கள் கூட்டத்திற்கு உங்களால் போக முடியவில்லை. நெசவாள மக்களை அவமானப்படுத்தி விட்டீர்கள். உங்களுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு பிரேமலதா பேசினார்.












Click it and Unblock the Notifications