18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உள்ளிட்ட 8 வழக்குகள்... டிசம்பர் 6க்கு ஒத்திவைப்பு!
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
சென்னை : 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உள்ளிட்ட தமிழக சட்டப்பேரவை தொடர்பாக தொடரப்பட்ட 8 வழக்குகளின் விசாரணை டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று முதல் டிசம்பர் 20ம் தேதி வரை இந்த வழக்குகளில் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் தரப்பில் 4 முக்கிய வாதங்கள் முன் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. முதல்வர் பழனிசாமியை மாற்றக் கோரி மனு அளித்த தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு நடைபெற்றது.

இன்று இந்த வழக்கில் சபாநாயகர் தனபால் தரப்பில் வழக்கறிஞர் அரியமாசுந்தரம் ஆஜராகி வாதாடினார். அப்போது 4 முக்கியமான விஷயங்கள் முன்வைக்கப்பட்டன. கொறடா கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே சபாநாயகர் தனபால் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து அறிவித்தார். சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது, கட்சிக்கு எதிராக செயல்படவில்லை என்று எம்எல்ஏக்கள் தான் நிரூபிக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யாததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தொடர்ந்து கேள்வி எழுப்பப்படுகிறது. அதிமுகவிற்கு உரிமை கொண்டாடி அவர்கள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்ததால் வழக்கு நிலுவையில் இருந்தது. எனவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.
கர்நாடகாவில் முதல்வராக இருந்த எடியூரப்பா வழக்கும் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கும் ஒன்றல்ல. இரண்டுமே முதல்வரை மாற்றும் வழக்கு தான் என்றாலும், கர்நாடகாவில் முதல்வரை மாற்ற எம்எல்ஏக்கள் கூறினாலும் ஆட்சிக்கு பங்கம் வரவில்லை. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையில்ஆட்சியையே மாற்றும் நடவடிக்கை என்பதால் 18 பேரையும் நீக்கியதாக சபாநாயகர் தரப்பு வாதம். தமிழகத்தில் முதல்வரை மாற்றினால் ஆட்சியையே மாற்றும் நடவடிக்கைக்கு சமம். கட்சிக்கு எதிராக செயல்படவில்லை என்று நிரூபிக்க வேண்டியது எம்எல்ஏக்களின் கடமை என்றும் அவர் வாதாடினார்.
இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பு வாதம் பிற்பகலிலும் நீடித்தது. இதனையடுத்து எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உள்ளிட்ட 8 வழக்குகளை டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். டிசம்பர் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications